Sunday, December 30, 2012

எவ்ளோ அடிச்சாலும் தாங்குவேன்!!

அப்போது புதியதலைமுறை நியூ இயர் ஸ்பெசல் புத்தகத்துக்காக ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். அது தான் எனக்கான 2012ஐ துவக்கி வைத்தது. நான் எழுதிய சில உருப்படியான கட்டுரைகளில் அதுவும் ஒன்று.  நண்பர் ஒருவர் கண்டுபிடித்த கருவி பற்றியது அது. எடிட்டிங் எல்லாம் முடிந்து புத்தகம் என் கைக்கு வந்த போது அதிர்ச்சி. அதில் என் பெயர் இல்லை.
”என்ன பாஸ் கட்டுரைல எங்க வாத்தியார் பெயரே வரலை” என்று அந்த கண்டுபிடிப்பாள நண்பர் போன் செய்த போதுகூட எனக்கு சிரிப்பு தான் வந்தது. “பாஸூ அதுல என் பெயரே வரலை” என அவரிடம் சொல்லவில்லை. ஆனால் இதற்காக நான் சண்டை போடவில்லை. காரணம் இருந்தது. அந்த வாரம் எடிட்டிங்கில் இருந்தவர் என் மதிப்பிற்குரியவர். சொல்லப்போனால் என் நண்பர். அவர் வேண்டுமென்றே இதை செய்யக்கூடியவர் அல்லர்.எனக்கான வழிகாட்டியே அவர் தான்.

சொல்லப்போனால் இந்த விசயத்தில் என்னைவிட அதிகமாக கவலைப்பட்டவரும் அவர் தான்.எடிட்டருக்கு இது தெரிந்தால் என்ற கவலைக்கும் மேலே சில கவலைகள் இருந்திருக்கலாம்.இன்னொன்று சண்டை போடுவதால் எதுவும் மாறப்போவதில்லை. புத்தகம் முழுவதும் அச்சாகிவிட்டது. மறுநாள் கடைகளுக்கு போய்விடும்.எனக்கும் சண்டை போடுவது ரொம்ப போராக மாறிவிட்டிருந்தது. பள்ளி கல்லூரிகளிலேயே அதிக சண்டைகளையும் பாலிடிக்ஸ்களையும் நிகழ்த்தியாகிவிட்டது.

”இந்த வருடம் நமக்கு பெருசா எதோ கிடைக்கப்போகுது மக்கா” என பெயர் வெளியிடப்படாத அந்த புத்தகம் என் மனதில் சொல்லிக்கொண்டே இருந்தது. இந்த வருடம் நிறைய எழுத வேண்டும் என்ற எண்ணத்தை அது விதைத்திருந்தது. பெரும்பாலும் இது போன்ற மனக்கசப்பு (?!) ஏற்பட்டால் யாரும் தொடர்ந்து எழுத மாட்டார்கள். எனக்கு ஏனோ எழுத தோன்றியது. என்னுடைய உழைப்பு என்பதையும் தாண்டி இந்த வருடத்திற்கான “சிறந்த பத்திரிக்கையாளர் விருதை” அதுதான் வாங்கிக்கொடுத்திருக்கக்கூடும்.  பரிசு வாங்கும் அந்த தினத்தின் போது இந்த சம்பவத்தை சொல்லி அவருக்கு நன்றி சொல்ல என்னுடைய கேணத்தனமான மனம் முந்தியது. ஆனாலும் அது அவரை காயப்படுத்தும் என்ற எண்ணம் என்னைதடுத்துவிட்டது.இந்த கணம் வரை அந்த சம்பவத்தை நானோ அவரோ நினைவு படுத்தியதில்லை.

இப்படியாக துவங்கிய இந்த வருடம் இது போல மறக்கமுடியாத பல நிகழ்வுகளின் மூலம் சந்தோசத்தையும் அதிர்ச்சியையும் வாரி வாரி வழங்கி இருக்கிறது. சந்தோசம் என்றாலும் இழப்பு என்றாலும் அது பெரியதாகவே இருந்திருக்கிறது. மூன்றுவருட கனவான ஜிம்முக்கு போகும் பிரவேசம் ஜனவரி மாதம் துவங்கியது.அதுவே மேமாதம் தொப்பையாக சரிந்தது என சில சந்தோசங்கள் சங்கடமாகி இருக்கின்றன. திரும்ப அந்த தொப்பையை குறைக்க படாத பாடு பட வேண்டி இருந்தது.
ஆசை ஆசையாக சேர்ந்த வேலை  ”இது நமக்கானது இல்லை” என தைரியமாக தூக்கி எறிந்த போது இருந்த சந்தோசம், HRரிடம் ஐடிகார்டை கொடுத்துவிட்டு வெளியே வந்து அந்த பெரிய கட்டிடத்தை திரும்பி பார்த்த போது காணாமல் போயிருந்தது.  எழுத்து என்பதே போரிங்கான விசயம் என நினைத்திருந்த என்னை எழுத்தாளனாக ஒரு கூட்டத்தை ஏற்கச்செய்திருக்கிறது.

ஃபேஸ்புக் என்னுடைய நிறைய நேரத்தை குடித்திருப்பதாக உணர்கிறேன்.ஆனால் எனக்கே தெரியாமல் என்னை வெளிப்படுத்தி இருக்கிறது. இந்த வருடம் ஷார் மார்கெட் உட்பட நான் எடுத்த பல புதிய முயற்சிகள் நிறைய அனுபவத்தையும், துணிச்சலையும் கொடுத்திருக்கிறது.என்னுடைய தாகம் உள்ளூர் சினிமாவை தாண்டி உலக சினிமாவை நோக்கி நகர்ந்திருக்கிறது.


2013க்கான பொறுப்புகள் கூடி இருக்கிறது.அது பயத்தை கூட்டி இருக்கிறது. பல நாள் கனவான fastrack வாட்சும் பேக்கும் சாத்தியமான அதே நேரம் அதை தொலைத்துவிட்டு அது கிடைக்குமா கிடைக்காதா என்ற பரிதவிப்பு என எல்லாமே இந்த வருடம் எனக்கு கொடுத்த அனுபவங்கள். எல்லா அனுபவங்களுமே எனக்கு கற்றுகொடுத்த பாடம் இவைதான்.

”சந்தோசமோ, சங்கடமோ அது நம்மை பாதிக்காத வரை தான் முன்னேற்றமெல்லாம்”. புதிய கனவுகளையும், பொறுப்புகளையும் எதிர் நோக்கி 2012க்கு சொல்கிறேன் Good bye.

Friday, December 21, 2012

ரொம்ப உணர்ச்சி வசப்படாதீங்க!!

டிசம்பர் 16. ஞாயிறு.இரவு டில்லி முனிர்கா பகுதியிலிருந்து துவாரகா நோக்கி சென்ற பஸ்சில் தனது ஆண் நண்பருடன் மருத்துவக்கல்லூரி மாணவி ஏறினார். அந்த நண்பரை  தாக்கி பேருந்திலிருந்து கீழே தள்ளி விட்ட  6 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர்.இதில் டிரைவர் ராம் சிங், அவனது சகோதரன் முகேஷ், உடற்பயிற்சி கூடத்தின் பயிற்சியாளர் வினய் ஷர்மா, பழ வியாபாரி பவன் குப்தா ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பின்னர் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இந்த தகவல் ஊடகத்தின் வழியே கசிந்த உடனே நாடு முழுவதும் பற்றி எறிந்தது. பாராளுமன்றத்தில் கடும் அமளி நடந்தது. ஜெயாபச்சன் அழுதார். சோனியாகாந்தி அந்த பெண்ணை நேரில் சந்தித்து ஆறதல் கூறினார்.
டிரைவர் முகேஷ் சிங்கை போலீஸார் விசாரித்த பொழுது அவர்களுக்கு பாடம் புகட்டவே இவர்கள் அப்படி செய்தார்களாம்.இவர்கள் எந்த கல்லூரியில் லக்சரர்களாக இருந்தார்கள்.அவர்களுக்கு பாடம் புகட்டுவதற்கு.இதற்கிடையே திகார் சிறையில் உள்ள கைதிகள் முகேஷ் சிங்கை அடித்து நொறுக்கி அவரின் சிறுநீர் மற்றும் மலத்தை அவரை சாப்பிட வைத்துள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளது.

பலாத்காரத்தில் ஈடுபட்ட அந்த கைதிகளை உடனடியாக தூக்கிலிட வேண்டும் என நாடு முழுக்க குரலெழுப்புகிறார்கள்.
இது மாதிரியான பிரச்சினைகள் நடக்கும் போது தான் நமக்குள் இருக்கும் நாட்டாமைகள் விழித்துக்கொள்கிறார்கள்.அவர்களுக்கு அர்ஜெண்டாக எதாவது தீர்ப்பு சொல்லியாக வேண்டிய அவசியம் உண்டாகிறது. போகிற போக்கில் அவனை குத்தணும், கொல்லணும் என்பதாக உளறத்துவங்கி விடுகிறார்கள்.

நீங்க சொல்லறத பார்த்தா அவனை மடியில தூக்கி உக்கார வச்சி கொஞ்சணூமா? என்ற கேள்வியே எழும். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.
கடந்த ஆண்டு மட்டும் நாடு முழுவதும் பதிவாகி இருக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளின் எண்ணிக்கை 2.25 லட்சம்.இதில் பதிவு செய்யபடாத வழக்குகள் எத்தனையாக இருக்கும்? இவர்கள் எல்லோருக்கும் தூக்கு தண்டனை கொடுத்தால் நாடு முழுவதும் பிணக்காடாக காட்சியளிக்கும். போங்க பாஸ். ஆறு பேர் சேர்ந்து ஒரு பொண்ணை கற்பழிக்கறதும். இதுவும் ஒண்ணா? எப்படியோ கற்பழிப்பு கற்பழிப்பு தானே.
ஒவ்வொரு பதினைந்து நிமிடமும் பெண்களுக்கெதிரான அத்துமீறல் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அவர்களையும் கண்டுபிடித்து தூக்கிலிடுவோமா? டெல்லியில் நடப்பதற்கு பதிலாக தமிழகத்தில் நடந்திருந்தால் இன்னேரம் அந்த குற்றவாளிகள் தப்பிக்க முயற்சி செய்து என்கவுண்டரில் கொல்லப்பட்டிருப்பார்கள்.  நாமெல்லாம் ஸ்வீட் எடுத்து கொண்டாடி இருப்போம்.

”இதுவே உங்க அக்காவோ தங்கச்சியாவோ இருந்தா இப்படி பேசுவீங்களா பாஸ்?” என ஆக்ரோசமாக கேள்வி எழுப்புவதற்கு முன்னால் சிலவற்றை யோசியுங்கள்.

கடந்த ஜூலை மாதம் அஸ்ஸாம் மாநிலத்தில் குவாஹாத்தி போன்ற ஒரு நகரத்தில், பரபரப்பான சாலையில், ஓர் இளம் பெண் இருபதுக்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பலால் துரத்தித் துரத்தி மானபங்கப் படுத்தப்படு-கிறார். பொதுமக்கள் பார்த்துக் கொண்டே கடக்கிறார்கள். சம்பவ இடத்தில் இருக்கும் ஒரு தொலைக்காட்சி நிருபர் பாதிக்கப்பட்ட பெண்ணைக் காப்பாற்றத்துளி யும் முயற்சிக்காமல், தன்னுடைய நிறுவனத் தைத் தொடர்புகொண்டு, குழுவினரை அழைத்து அணுஅணுவாக அதைப் படம் பிடிக்கிறார். அது தொலைக்காட்சியில் அப்படியே ஒளிபரப்பாகிறது. இவ்வளவு பேர் பார்க்க நடக்கும் ஒரு சம்பவ இடத்துக்குக் காவல் துறை வந்து சேர அரை மணி நேரம் ஆகிறது. ‘‘என்பணி செய்தி சேகரிப்பது. அதை மட்டும்தான் நான் செய்ய முடியும்’’ என்கிறார் நிருபர். ‘‘குற்றம் நடக்கும் இடத்துக்கு நீங்கள் அழைத்த நிமிஷமே வர காவல் துறை ஒன்றும் ஏ.டி.எம். அல்ல’’ என்கிறார் மாநிலத் தின் காவல் துறை இயக்குநர்.
இந்த சம்பவத்தை நாம் மறந்துவிடவில்லையா? அதே போல் இன்னும் இரண்டு மாதத்தில் டெல்லி சம்பவத்தையும் மறக்க தான் போகிறீர்கள். இப்பொழுதே மாயன் சொன்னானே. உலகம் அழியலையே என்ற கவலையில் நீங்கள் இருக்கக்கூடும். பாத்ரூம் போகிற கேப்பில் டிவியில் ”பெண் கற்பழிப்பு “ என தலைப்பு செய்தியை பார்த்து “ இவனுங்கள நிக்க வச்சி சுடணும்” என தீர்ப்பு எழுதுகிறவர்கள் தானே நாம்.

பிரச்சினையின் முழுபரிமாணம் தேவையில்லை. அதை வேரோடு பிடுங்கி எறிவது பற்றி அக்கறை இல்லை.அரசியல் வாதிகளை போல நாமும் அரசியல் செய்ய பழகிவிட்டோம். அதன் ஒரு வடிவம் தான் இந்த கொந்தளிப்பு.

”அவர்களுக்கு மரணதண்டனை கொடுங்கள்” என்று போராடத்தெரிந்த நமக்கு “எங்களுக்கு பாலியல் கல்வி கொடுங்கள்” என போராடத்தெரியாதது தான் நம் பலவீனம். காரணம் பாலியல் கல்வி என்றாலே முதலிரவு அறையில் பொண்டாட்டியிடம் எப்படி உடலுறவு வைத்துக்கொள்வது என படம் வரைந்து பாகம் குறித்து சொல்லித்தருவார்களாயிருக்கும் என்ற நம்முடைய கேணத்தனமான கற்பனை.இந்த பலவீனத்தை போக்குவது பற்றி நமக்கு அக்கறையில்லை.

இது மாதிரியான ஜூஜிலிப்பா கோரிக்கையை முன்னிறுத்தி போராடினால் ஊர்ல நம்மள ஒரு பயலும் மதிக்க மாட்டான் என்ற நம்பிக்கை. அரசியல் வாதிகளின் கபடத்தனமான கண்ணீரையும் ஆக்ரோசமான மேடை பேச்சுக்களையும் நம்பி வீணாய் போகிறோம் என்பது நமக்கும் தெரியும். இலங்கையில் அத்தனை பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட போதும், காஷ்மீரில் தினம் தினம் நம் ராணுவம் நடத்தும் பாலியல் ஒத்திகையின் போதும் வராத கண்ணீர் ஆறு பேர் சேர்ந்து ஒரு பெண்ணை கற்பழிக்கும் போது வருகிறதென்றால் அதற்கு பெயர் கண்ணீரல்ல. கானல்நீர்

அஜ்மல் கசாப் தூக்கில் போடப்பட்டபோது சொன்னீர்களே.. இப்படி பண்ணாதான் தப்பு குறையும் என்று. அவனை தூக்கில் போட்டு இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை. குறைந்ததா?
எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள் எதையுமே புரிந்துகொள்ள திராணி அற்றவர்களாயிருப்பார்கள் என்பது நம் விசயத்தில் உண்மைதானே.

Friday, December 14, 2012

தண்ணி பார்ட்டிகள்

 குடிகாரர்களுடனான என்னுடைய அனுபவம் படுசுவாரசியமானது. சவாலாதும் கூட. குடிகாரர்கள் பற்றி எதாவது சொல்ல வந்தாலே யாராவது படுவேகமாக என்பக்கத்தில் வந்து “தண்ணி அடிக்காதவன்லாம் நல்லவனும் இல்ல. தண்ணி அடிக்கறவனெல்லாம் கெட்டவனும் இல்லை” என போதையில் உளறத்துவங்கி விடுகிறார்கள்.

சமகாலத்தில் உட்கார்ந்து யோசிக்கும்போது “நாம மட்டும் தான் குடிக்காம இருக்கோமோ” என்ற எண்ணம் தோன்றுமளவுக்கு நண்பர்கள் எல்லோரும் படுவேகமாக குடிபழக்கத்திற்கு ஆளாகி வருகிறார்கள். ”ஆமா நீ மீடியால இருக்க.. அங்க அப்படி தான் இருப்பாங்க” என்பதாக எனக்கு பதிலளிக்குமுன்.. ”வெளியேயும் அப்படிதான் இருக்காங்க” என்பது தான் அதிர்ச்சியான நிலவரம்.
”அப்புறம் இன்னிக்கி நைட்டு ட்ரீட்டா” என்பதாக யாராவது வாயைத்திறந்தால் அதில் பீரும் விஸ்கியும் இடம் பெற்றே ஆக வேண்டும் என்பது எழுதப்படாத விதி. வள்ளுவர் சமகாலத்தில் வாழ்ந்திருந்தால் கூட “பீரின்றி அமையாது ட்ரீட்” என்றிருப்பார்.


 நான் தண்ணி அடிக்காததால் நல்லவன் என்றோ, யோக்கியன் என்றோ பதிவு செய்யும் எண்ணம் எனக்கிங்கில்லை. ஆனால் தண்ணி பார்ட்டிகளுடனான என்னுடைய அனுபவமெல்லாம் சலிப்பூட்டுபவையாகவே இருந்திருக்கின்றன. சில சமயம் அதிர்ச்சியாகவும் இருந்திருக்கின்றன.
அப்போது திருச்சி பிஷப் ஹீபர் பள்ளியில் 12வது படித்துக்கொண்டிருந்தேன். பத்தாம் தேதிக்குள் ஹாஸ்டல் மெஸ்ஸூக்கு பணம் கட்டியாக வேண்டும்.  இல்லையென்றால் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்.இந்த முறை மெஸ்பில் 900. என்னிடம் 100ரூ குறைந்தது.10ஆம் தேதி வியாழக்கிழமை. கட்டவில்லையென்றால் 11ம் தேதி மாலை பாரபட்சமில்லாமல் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் “பணத்தை கட்டிவிட்டு ஹாஸ்டல்ல தங்கிக்கலாம்” என்பது தான் அவர்கள் சித்தாந்தம்.

“டேய் நீ கொஞ்சம் பொறுமையா இருடா. நான் ஞாயித்திகிழமை திருச்சிக்கு வர்ரேன். பணம் கட்டிடலாம். வார்டன்கிட்ட சொல்லு. ஒண்ணும் பண்ண மாட்டாய்ங்க.” என்பதாக என் அப்பா போனில்.
எவன்கிட்டயாவது 100ரூ வாங்கி கட்டிடலாம் என்பதாக யோசித்து நண்பர்களிடம் கேட்டால் “போடா என்கிட்டயே இல்லை” என்றார்கள் ஆளாளுக்கு. இவ்வளவு பெரிய களேபரமும் 10ம் தேதி மாலை ஸ்டெடி ஹாலில். ராத்திரி சாப்பிட்டுவிட்டு தூங்க இரவு 11 மணி ஆகி இருக்கும். 1மணிக்கு என் பக்கத்தில் ஒருவன் வந்து “நவுந்து படுடா” என்று தொல்லை குடுத்தான். அவன் படுத்த போது எதோ விசித்திரமான வாடை. காரணம் தண்ணி. (குவாட்டர் என்பதாக அறிக)

 நமக்கு 100 ரூ குடுக்க கைல இவனுங்களுக்கு பணம் இல்லை 1000ரூவாய்க்கு தண்ணி. சரி விடு பொழைச்சி போறாய்ங்க என்றால். இதில் இன்னொரு சுவாரசியமான விசயம் அவங்க கட்ட வேண்டிய மெஸ் பணத்தில் வாங்கிய சரக்கு தான் அது. சுமார்  5 பேர். அதில் 3 பேருக்கு முன்பின் தண்ணீர் பருகிய அனுபவமில்லை. அதனால் மூர்ந்து பார்த்து வாய்வழியே மூச்சா போயிருக்கிறார்கள். அந்த வாடையை காலையில் ஸ்மெல் செய்த வார்டன் அவர்களை கூப்பிட்டு பாராட்டுவிழா (?!) நடத்தி ஹாஸ்டலை விட்டு வழியனுப்பி வைத்ததோடு அந்த கதையை முடித்துக்கொள்வோம்.
அடுத்து கல்லூரி. விடுதியில் கூட தங்கி இருந்த மாணவனுக்கு உதவித்தொகையாக 5000 ரூபாய் வந்தது. என்னையும் கூட்டிக்கொண்டு நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற(!?) பார் என்று அழைத்து சென்றான். “எனக்கு உடம்பு ரொம்ப ஒல்லியா இருக்கா. அதான். பீர் சாப்ட்டா உடம்பு ஏறிடும். உனக்கு தெரியாதா?” என்பதாக ரெண்டு கட்டிங் உள்ளே தள்ளினான். என்னுடைய வேலை அவனுக்கு வைக்கும் சைட் டிஷ்ஷை காலி செய்வது (அம்புட்டு நல்லவனாடா நீ)

”சார் சைட் டிஷ் லிமிட் தான்.. சார்” என்று பார்காரன் சொல்லும்வரை என் சேவை தொடர்ந்தது. அதனால் அவ்வப்போது அவனோடு சைட்டிஸ்ஸுக்காக செல்வேன்.
மூன்றாவது திருச்சி. ரூம் மேட் ரொம்ப தங்கமான மனுசன். சனிக்கிழமை இரவு ஆனால் நிறைய சைட்டிஷோடு தண்ணி வாங்கியாருவார். அவர் ரெண்டு லார்ஞ் உள்ளே தள்ளி இருக்கும் போது பாதி சைட்டிஸ் காலியாகி இருக்கும். ரூமில் நாங்க ரெண்டு பேர் தான். ரூமில் ஒரே ஒரு கட்டில் தான் இருக்கும். மற்ற நாட்களில் யாரும் அதை பயன்படுத்த மாட்டாமல் நிமிர்த்தி வைத்திருப்போம். சனிக்கிழமை மட்டும் அதற்கு வேலை வந்துவிடும். நான் அதன் மேலே படுத்துக்கொள்வேன்.

காரணம் ரூம் மேட். அவர் தண்ணி அடித்து முடித்தவுடன் முழு போதையில் தரையில் கவிழ்ந்தால் சூரியன் போல 360 டிகிரியில் சுற்றி வருவார். நான் கீழே படுத்திருந்தேன். செத்தேன். அவர் உருளும் போது என் மூக்கில் காலைத்தூக்கி போடுவார். அந்த முரட்டுதனமான காலை சில நிமிடங்கள் செலவு செய்து தூக்க வேண்டி வரும். அதனால் தூக்கம் ஸ்பாயில் ஆகிவிடும் என்பதற்காக தான் கட்டில் ஏற்பாடு.

ஆனால் ரொம்ப தெளிவாக இருக்கிறேன். தண்ணி அடிக்ககூடாது என்பதில் மட்டுமல்ல. எக்காரணத்தை முன்னிட்டும் இத்தகைய நண்பர்கள் தண்ணி அடிக்கும்போது “மச்சி வேணாம்டா வீணா போய்டாதீங்க” என சொல்லி அவர்கள் மூடை ஸ்பாயில் பண்ணக்கூடாது என்பதில்.
காரணம் நமக்கு தொழில் சைட்டிஷ், இவர்களை வேடிக்கை பார்த்தல்

Saturday, December 1, 2012

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்

நான்கு நண்பர்கள். எல்லோருமாக சேர்ந்து கிரிக்கெட் விளையாடுகிறார்கள். சுவாரசியமான விளையாட்டு. ஹீரோ விஜய் சேதுபதிக்கு தலையில் அடிபட்டு விடுகிறது. எல்லாம் மறந்து விடுகிறது.

எல்லாம் என்றால்.. மறுநாள் ரிஷப்சன் என்பதும், அதற்கடுத்த நாள் கல்யாணம
 நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்

் என்பதும். இடைபட்ட ஒராண்டு காலம் நடந்த சம்பவங்களெல்லாம் மறந்துவிடுகிறது!!

ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் லவ்ஸ்.. அது தான் கல்யாணம் வரைக்கும் வந்திருக்கு.பொண்ணு வீட்டுல எதிர்ப்பு.. “எனக்கு எல்லாமே மறந்துடுச்சி” என்பதை சாக்காக வைத்து ஹீரோயினை கலட்டி விட்டுடுவார் என புத்திசாலித்தனமாக (?!) நாம் யோசித்தால், கதை வேறு வகையில் ட்ராவல் ஆகிறது. காரணம் ஹீரோவுக்கு தான் எல்லாம் மறந்துடுச்சே.. ஞாபகம் இருந்திருந்தால் இதையெல்லாம் செய்திருக்க வாய்ப்பிருக்கு.

ரைட்டு விடு. அவர் தலைல அடிபட்டுடுத்து.எல்லாம் மறந்துடுத்து. கூட விளையாடுனவங்கள சும்மா விடுவானுங்களா? அவர்களை ஹீரோவே பழி வாங்குகிறார். “என்னாச்சி. கிரிக்கெட் விளையாடுனமா? பால் மேல போச்சா.. நா கேட்ச் பிடிக்க போனனா? ஓ.. மிஸ் ஆயிடுச்சா.. நான் கீழ விழுந்துட்டேன்.. தலைல இங்க அடிபட்டுடுச்சி (பின்னந்தலையில் கை வைத்து அந்த இடத்தை காட்டுகிறார்) இங்க தான் Medulla oblongata வில அடிபட்டிருக்கும்(இது என்ன டாபர் ஆம்லா கேச தைலம் மாதிரி இருக்குன்னு பாக்கறீங்கலா.. அது அப்படி தான் கண்டுக்காதீங்க) அதான் இப்படி ஒண்ணும் ப்ராப்ளம் இல்லை கொஞ்சம் நேரத்தில சரியாயிரும்”

இந்த வசனத்தை அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு ஒரே மாதிரியான மாடுலேசனில் படம் முழுக்க பேசி தன்னோடு விளையாடியவர்களை பழி வாங்குகிறார். நம்மையும் (!).. அங்கன அடிபட்டா அப்படி தானாம். எல்லாம் மறந்து போயிடுமாம். ”இப்பிடி எல்லாத்தையும் மறந்துட்டு வந்து நிக்கிறியே.. எடுபட்ட சிறுக்கி” என்பதாக மற்ற மூன்று நண்பர்கள் தங்கள் தலையில் அடித்துக்கொண்டு, அவ்வப்போது செவுத்தில் முட்டிக்கொண்டு தங்கள் நண்பனின் ரிசப்சனையும், திருமணத்தையும் வெற்றிகரமாக நடத்தினார்களா என்பது தான் கதை.

மூணே நாள் கதையை படமாக சுவாரசியமாக சொல்ல வேண்டும், அது தான் சவால். சில வசனங்களையே வைத்துக்கொண்டு ஹீரோ தடுமாறுவார் என்று பார்த்தால் பின்னிப்பொடல் எடுக்கிறார். கூட இருக்கும் நண்பர்கள் அவரை தூக்கி சாப்பிடுகிறார்கள். கேமராமேன் வேறு, நம்மை கதையோடு கழுத்தை பிடித்து தறதறவென இழுத்துக்கொண்டு போகிறார். போதாதற்கு BGM.. Sound mixing ஆசாமிகள் நம்மை பாடாய் படுத்துகிறார்கள்..

இப்ப என்ன ஆச்சின்னு அதுக்குள்ளாற இண்டர்வல் என நாம் தலையை பிய்த்துக்கொள்வது தான் மிச்சம். அந்த மூன்று நண்பர்களும் குடுக்கிற சேட்டை இருக்கிறதே.. அப்பப்பா.. வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்கள்.சந்தானத்தையெல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடுவார்கள் போல..

“இது யாரு மச்சி மொக்க பீஸா கீது” என ஹீரோவோடு சேர்ந்து நாமும் ஹீரோயினை கலாய்த்தால், அவர் நேரில் செம்ம அழகாக கீறார். படத்துக்கு பாட்டே தேவையில்லை. ஆனாலும் ஒரு ப்ரோமோ சாங்க் போட்டுக்கறாங்கோ..பகவதி பெருமாள் அண்ணன் பட்டய கெளப்பீருக்காப்ல.(அதான் பக்ஸ்னு படத்துல வருவாரே. நேர்லயும் நாங்க அவரை அப்படி தான் கூப்புடுவோம்).இயக்குனர் பாலாஜி தரணிதரனின் இத்தகு சேவை நாட்டுக்கு தேவை. மத்தபடி படத்த ஒரு தடவைக்கு மேல பார்க்கலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள தியேட்டரை அனுகவும்..(டிக்கட் உள்ளவரை மட்டுமே)

Saturday, November 10, 2012

டைலர்கள் படுத்தும் பாடு

எட்டாவது படித்திருந்தால் போதும், ஏன் அது கூட தேவை இல்லை.யாராவது ஒரு டைலரிடம் வேலைக்கு சேர்ந்து 2 வருடம் தொழில் கற்றுக்கொண்டால் போதும். ஒரு தையல் மிஷினை வாங்கி நாமும் டைலர் கடை ஆரம்பித்துவிடலாம் என்ற எண்ணம் தான்  பத்து ஆண்டுகளுக்குமுன் நம்மூர் ஆசாமிகளிடம் இருந்தது.

அப்போதெல்லாம் தெருவுக்கொரு டைலர் இருப்பார்.அவர் கடையில் எப்போதும் கூட்டம் இருக்கும். கூட்டத்திலிருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவை. பிறந்த நாள், காதுகுத்து, கல்யாணம்,கருமாரி,தீபாவளி, பொங்கல் என எவ்வளவோ காரணங்கள். நம்முடைய எல்லாக்கொண்டாட்டங்களிலும் உடை முக்கியப்பங்கு வகிக்கிறது.தீபாவளி சமயங்களில் சரவணாஸ்டோரில் இருக்கும் கூட்டம், அப்போது டைலர் கடைகளில் இருக்கும். இப்போதும் கூட்டம் இருக்கிறது.ஆனால் அது பெருசுகளின் கூட்டம். எல்லாம் பழைய பஞ்சாங்கங்கள்.

பத்து ஆண்டுகளில் எவ்வளவோ மாறி இருக்கிறது. எங்கூரில் இருந்த எத்தனையோ டைலர்கள் ஊரை காலி செய்துவிட்டு திருப்பூர் எக்ஸ்போர்ட் கம்பெனிகளில் சூப்பர்வைசராக செட்டிலாகிவிட்டிருந்தார்கள்.கைநிறைய சம்பளம்.18 மணி நேரம் நின்றுகொண்டே வேலை.ஊட்டச்சத்து குறைந்த சாப்பாடு.மூன்று மாதத்துக்கொரு கம்பெனி.இது தான் அவர்களின் இன்றைய வாழ்க்கைமுறை.

“அப்பல்லாம் தீபாவளின்னாலே, என்னோட கடைல என்ன கூட்டம் இருக்குங்குற.அத்தன பேர் வந்து பொத்து பொத்துன்னு விழுவானுங்க. சொன்னா நம்ப மாட்ட, தீபாவளி சீசன்ல மட்டும் 50ஆயிரம் ரூவா சம்பாதிச்சிருக்கேன்.தினமும் 2 மணி நேரம் கூட தூங்குனதில்லன்னா பாத்துக்கோயேன்”

என மணிடைலர் தன் அனுபவங்களை பகிர்ந்துகொண்ட போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.”என் கடைல மட்டும் 4பேர் வேலை பார்ப்பானுங்க. ராஜ வாழ்க்கை. யார்கிட்டயும் கைகட்டி நிக்க வேண்டியதில்ல.எவனும் என்னைய கேள்வி கேக்க முடியாது.ஊர்ல நமக்குன்னு ஒரு மரியாதை இருந்துது” என பேசிக்கொண்டே என்னை ஆழமாக பார்த்தவர் “சொன்னா நம்பமாட்ட, 15 வருசத்துக்கு முன்னாடி நம்மூர்ல டைலரே இல்ல. நான் தான் டைலர்.எவனும் என்னை பகைச்சிக்க முடியாது. ஏன்னா தீபாவளின்னா நம்ம கடைல தானே வந்து நிக்கனும்” என பெருமிதத்தோடு சொன்னார்.

இப்படி ஒவ்வொரு டைலருக்கு பின்னாலும் ஒரு சுவாரசியமான, பெருமிதமான கதை இருக்கும்.இது முதலாளியின் பெருமிதம்.(இன்று அவர் ஒரு தொழிலாளி என்பது வேறு கதை).

அன்று இந்த டைலர்களின் கடையில் முண்டியடித்து, இன்று சரவணா ஸ்டேர்ஸ் ஏறி இறங்கும் என் போன்றவர்களின் கதை வேறு.இந்த கதைகள் அந்த டைலர்களை தோற்கடித்தது. ஊரைவிட்டே ஓட வைத்தது.இந்த கதைகளை அவர்கள் ஒருபோதும் உணர்ந்ததில்லை.

அப்போதெல்லாம் ரெடிமேட் என்பது எட்டாக்கனி.ரொம்ப செலவாகும்.ஒரு சட்டை, ஒரு பேண்டு எடுக்கவே ஆயிரம் ரூவா ஆகும்.இப்போ தான் ஆயிரத்துக்கு மதிப்பில்ல.அப்போ வெறும் 2000ரூபாயில்(!?) குடும்ப மொத்ததுக்கும் துணி எடுத்து, பலகாரம்,வெடி என எல்லாம் முடிந்து விடும். ஒரு நல்ல சனி, ஞாயிறாக பார்த்து குடும்பம் மொத்தமும் எங்கூரிலிருந்து(தொட்டியம்) திருச்சிக்கு பஸ் பிடிப்போம். இதெல்லாம் தீபாவளிக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடியே.எங்கப்பா தீபாவளி துணிக்காக 2 மாதத்துக்கு முன்னமே பணம் சேர்க்க ஆரம்பித்து விடுவார்.

திருச்சி சாரதாஸுக்குள் குடும்பமாக நுழைவோம். சட்டை மீட்டர் பிட் 45லிருந்து துவங்கும். பேண்ட் மீட்டர் பிட் 75லிருந்து துவங்கும். நாங்கள் சராசரியான ரேட்டுக்கு தான் வாங்குவோம். நான், அண்ணன்,அப்பா என எல்லோருக்கும் துணி எடுத்து அம்மாவுக்கு புடவை வாங்கி எல்லாம் பட்ஜட்டுக்குள் அடங்குமாறு பார்த்து (பட்ஜட் என்பது சட்டை, பேண்ட் தையக்கூலியும் சேர்த்தது) வாங்கி, திருச்சியிலிருக்கும் துணி கடை காரரிடம் மொத்தமாக கொடுப்போம். அவர் மொத்தமாக எல்லாருக்கும் தைக்க 800 ரூ வாங்குவார்.அதில் பேரம் பேசி 750க்கு முடிப்போம்.

எங்கூரில் துணி தைத்தால் அது வேறு வகை சங்கடங்களை கொடுக்கும்.சொன்ன தேதிக்கு தரமாட்டார்கள். அரசு அலுவலகங்களைப்போல ஐந்தாறு முறை அலயவிட்டால் தான் அவர்களுக்கு நிம்மதி. எனக்கு சட்டை தைக்க சொன்னால் எங்க தாத்தாவின் அளவுக்கு தைப்பார்கள். கேட்டா “இன்னும் 2 மாசத்துல கிடுகிடுன்னு வளர்ந்துடுவ தம்பி” என மொக்கை போடுவார்கள்.  நான் என்ன complan boyயா.ரெண்டு மாசத்தில் 2 அடி வளர்வதற்கு.இல்லை நாமக்கல் ஆஞ்சனேயரா?

“சட்டைய கொஞ்சம் ஆல்டர் பண்ணி குடுங்கன்னே” என்று கேட்டால்..

“தம்பி தீபாவளி முடியறவரைக்கும் டைட்டு.. ஆல்டர் தானே. அப்புறமா பண்ணிட்டா போச்சு” என்பார் சர்வசாதாரணமாக.தீபாவளி அன்றைக்கு எல்லாரும் கச்சிதமாக உடையணிந்திருக்க, நான் மட்டும் தாத்தா சட்டை போட்டுக்கொண்டு நிற்கவேண்டி வரும். தீபாவளி உடை அணிவதற்காகவே தீபாவளிக்கு மறுநாள் பள்ளியில் நாள் ஒதுக்கி இருப்பார்கள்.என்னைபோல பலதாத்தாக்கள் அதில் தோன்றி “நண்பேண்டா” என கட்டிபிடித்து சிரிப்பார்கள்.
தீபாவளிக்கு பிறகு 15 நாள் அந்த டைலர் ஆளே இருக்கமாட்டார்.

“இப்ப தான் தீபாவளி துணியெல்லாம் முடிச்சோம்.அதான் ரெஸ்டு” என்பார். “ஆலட்ர்க்கு துணி இருக்கு”

“திங்ககிழமை வாப்பா.ஏற்கனவே எல்லாரும் ஆல்டருக்கு துணி குடுத்துருக்காங்க” என்பார்.திங்கள் கிழமை புதனாகும், புதன் ஞாயிறாகும்.அவரிடமிருந்து துணி வாங்குவதற்குள் அடுத்த தீபாவளி வந்துவிடும்.

ரெடிமேடு துணியெல்லாம் விலைகுறைவாக(!?) வந்தபிறகு இவர்களிடம் மல்லு கட்டவேண்டிய அவசியம் இல்லாமல் போனது.அந்த சமயம் டைலர்களெல்லாம் மெல்ல மெல்ல கட்டுபடியாகாத விலை ஏற்றி இருந்தார்கள். துணி பிட்டெல்லாம் காலத்துக்கு தகுந்தவாறு ஃபேஷன் தாங்கி வராமல் பழைய டிசைன்களிலேயே டப்பா டான்ஸ் ஆடினார்கள்.ரெடிமேட் கடைகளிலேயே நமக்கு பிடித்த துணியை போட்டு பார்க்கலாம். பத்தலன்னா வேற டிசைன். பிடிக்கலன்ன வேற கடை.

யாரிடமும் மல்லுகட்டியாக வேண்டிய அவசியமில்லை.இப்படியாக டைலர்கள் இளசுகளை இழந்து கொண்டிருக்க, “பெண்களுக்கு பெண்கள் தான் துணி தைக்கணும், அப்பதான் சரியா வரும்” என மகளிர்குழுக்கள் மல்லுகட்ட கடைசியில் நம்மூர் டைலர்கள் திருப்பூருக்கு மூட்டை கட்டியது தான் மிச்சம். இன்னமும் எப்படி தோற்றோம் என அவர்களுக்கு தெரியாது.

அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ரெடிமேடுகளின் வருகை தானே தவிர, வாடிக்கையாளர்களின் இழப்பல்ல.

பட்டாசு அரசியல்


”தம்பி பட்டாசு வாங்கலயா?”

“இல்ல..”

“ஏன்டா”

“எங்க ஸ்கூல்ல பட்டாசு வெடிக்ககூடாதுன்னு சபதம் எடுத்திருக்கோம்”

நல்லது.. பல வருடங்களுக்கு முன்பு பள்ளியில் படிக்கும் போது நானும் கூட இப்படி ஒரு சபதம் எடுத்திருந்தேன். அது நீண்ட காலம் வரை தொடர்ந்தது.

“எங்க வீட்டுல பட்டாசு அதிகமா வாங்கிட்டோம். நீங்க கொஞ்சம் வெடிங்க” என பக்கத்து வீட்டு ஆண்ட்டி, பாசமாக பட்டாசு தரும்வரை அந்த சபதம் தொடர்ந்தது.பல தீபாவளிகள் எங்கள் வீடுகளில் பட்டாசே வாங்கியதில்லை. சில தீபாவளிகள் துணியே வாங்கியதில்லை என்பது வேறு கதை.

பள்ளிகளில் பட்டாசுக்கு எதிரான சபத்திற்கு சொல்லப்படும் காரணங்களில் முக்கியமானது

1) காசை கரியாக்கக்கூடாது
2) சின்ன குழந்தைகளை பணிக்கு அமர்த்துகிறார்கள்
3) எல்லா நல்ல பழக்கங்களையும் குழந்தைகளிலிருந்தே துவங்க வேண்டும்


முதலாவது வேலிட் பாயிண்ட்.பட்டாசு வெடிப்பதால் மட்டும் தான் காசு கரியாகும் என்பதை எவன் கண்டுபிடித்தானோ.. வாய்வழியே வயிற்றுக்கு பயணிக்கும் கோட்டரும், சுவாசக்காற்றோடு நுரையீரலுக்கு தாவும் புகையிலையும் எந்த லிஸ்டில் சேரும் என்பது பற்றியெல்லாம் எந்த பதிவுகளும் இல்லை.இதற்கு எதிராக எந்த சபதமும் எடுக்கபட்டதாக நினைவில்லை. முக்கியமான காரணம் குழந்தைகளுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது ஒன்று, இன்னொன்று மது, புகையிலையை பயன்படுத்தும் எவரும் நம் பேச்சை கேட்கமாட்டார்கள்.

பட்டாசால் சுற்றுச்சூழல் மாசுபடும் என்றால், நாம் பயன்படுத்தும் வாகனங்கள் என்ன செய்கின்றனவாம்.அவற்றை பயன்படுத்துவதை குறைப்பதை பற்றி என்றாவது தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோமா?

இரண்டாவது..பட்டாசு தொழிற்சாலையில் சின்னக்குழந்தைகளை பணியமர்த்துகிறார்கள்,  நாம் பட்டாசு வாங்குவது அந்த தொழிற்சாலைகளை மோட்டிவேட் செய்வது போலானது என்கிறார்கள்.” நாம பட்டாசு வாங்கலன்னா அவங்க தொழில் நஷ்டமடையும்” என்ற கேணத்தனமான ஐடியாக்கள் பிள்ளைகளின் மனதில் விதைக்கபடுகின்றன.
 
பட்டாசு தொழிற்சாலையில் குழ்ந்தை தொழிலாளர்களை பணியமர்த்து வதற்கு எதிரான பேரணி, தமிழக அரசு அதை கண்காணிக்க கோரி போராட்டம், என போராட்டங்களை நடத்தி அதில் பிள்ளைகளை பங்கு பெறச்செய்வது தான் அவர்களின் மனதில் போராட்ட விதைகளை தூவும். இது தான் அக்கப்பூர்வமான நடவடிக்கையும் கூட.இந்த பழக்கத்தை தான் குழந்தைகளில் இருந்தே பழக்க வேண்டும்.

ஆனால் இது போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளில் பள்ளிகள் பங்கு பெறாததற்கு என்ன காரணம்.

ஊரில் எல்லா குழந்தைகளுமே தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் போது ஒரே ஒரு குழந்தை மட்டும் வெடிக்க வில்லை என்றால்
“ நீ மட்டும் ஏன் பட்டாசு வெடிக்கல” என அந்த குழந்தையை நாம் கேட்கும் போது
“எங்க ஸ்கூல்ல பட்டாசு வெடிக்க கூடாதுன்னு சொல்லிருக்காங்க”

“ நீ எந்த ஸ்கூல்”
என நாம் கேட்கும் போது பள்ளியில் பெயரை அந்த குழந்தை சொல்லும்.

பரவால்லயே நல்ல ஸ்கூலா இருக்கே.. எவ்ளோ நல்ல பழக்கங்களை சொல்லி தருகிறார்கள். என்பதாக அந்த பள்ளிக்கு நல்ல பெயர் கிடைக்கும்.எவ்வளவு பெரிய விளம்பர உத்தி இது. பள்ளியின் விளம்பரத்திற்காக ஒரு குழந்தை தன்னுடைய அப்போதைய சந்தோசத்தை பலி கொடுக்கிறது.அது வளர்ந்து பெரிய ஆள் ஆனதும் வெடி வெடிப்பதில் சுவாரசியம் இருக்க போவதில்லை.

ஒழிக்க வேண்டியது எவ்வளவே இருக்க பட்டாசை ஒழிப்பானேன்.

நாம் ஒழிக்க வேண்டியது எவ்வளவோ இருக்க பட்டாசுக்கு எதிரான சபதம் ஏன்?

நம்முடைய நோக்கம் சமூக மாற்றமா? வெற்று விளம்பரமா?



Tuesday, October 30, 2012

பிக்பஜாரில் பை தொலைந்த அனுபவம்

கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி.அலுவலக வேலை விஷயமாக வெளியூர் போகவேண்டி ஏற்பாடானது.கைவசம் இருந்த ட்ராவல் பேக் எல்லாம் வீணாகிவிட்டதால் “புதுசா வாங்கத்தான் போறோம். ஃபாஸ்ட்ராக்ல வாங்குவோம்” என்பதாக பாண்டிபஜாரில் fastrackல் bag ஒன்றும், வாட்ச் ஒன்றும் சேர்த்து சுமார் 3000 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிவிட்டு வெளியேறினேன்.மணி மாலை 7மணி இருக்கும்.

அப்படியே டிசர்ட் எதாவது வாங்கலாம் என பாண்டிபிக்பஜாரில் உள்ள பிக்பஜாருக்குள் நுழைந்த போது வெளியே ஒரு கை தடுத்தது.”bagஅ இங்கே குடுத்துட்டு போங்க” என்பதாக. அப்போது தான் புத்தம் புதிதாக வாங்கிய fastrack பேக், பேப்பர் கவர் போட்டு அழகாக பேக் செய்யப்பட்டிருந்தது.அதை செக்யூரிட்டி வாங்கி வைத்துக்கொண்டார். கடைக்குள் நுழையும் கஸ்டமர்கள் எல்லோரும் தங்கள் கைகளில் இருக்கும் பையை வெளியே இருக்கும் பாதுகாவலரிடம் கொடுத்துவிட்டு போய்விட வேண்டும் என்பது பிக்பஜார் மட்டுமல்ல, பல்வேறு பெரிய கடைகள் கடைபிடிக்கும் சமகால நடவடிக்கை தான். “கஸ்டமர் bagல எதையாவது அள்ளிபோட்டுகிட்டு வீட்டுக்கு போயிட்டா” என்ற உயரிய எண்ணம் காரணமாக இருக்கலாம்.

 நான் மட்டும் என்ன? பெரிய இவனா? என் புது bagஐ அவர் கையில் ஒப்படைத்து, டோக்கன் வாங்கிக்கொண்டேன்.கடையின் ஒவ்வொரு தளமாக சுற்றி சில ஜாமான்களை வாங்கிவிட்டு, வெளியே வந்து டோக்கன் கொடுத்து பேக் கேட்டால் “bagஅஇங்கயா குடுத்தீங்க” என்கிறார் செக்யூரிட்டி.எனக்கு தூக்கிவாரி போட்டது. ”பின்ன எங்க கைல எப்படி டோக்கன் வரும்?” என்றபோது, அவர் திருதிருவென விழிக்கிறார்.

”கொஞ்சம் இருங்க.. கொஞ்ச நேரம் முன்னாடி வேற ஒருத்தர மாத்தி விட்டுருந்தேன்.அவர் எங்கயாவது மாத்தி வெச்சிருப்பார்” என்றார். ”இருக்கும்” என நினைத்து அவருக்காக வெயிட் செய்தேன்.அவர் வந்துவிட்டு “அப்படியா?இல்லையே.. நான் பாக்கலையே.. இங்க தான் குடுத்தீங்களா? நல்ல தெரியுமா? மாத்தி கீத்தி குடுத்துருக்கபோறீங்க” என எங்களை கேணயனாக பார்த்தார்.

சிறிது நேரத்தில் செக்யூரிட்டிகளுக்கெல்லாம் தலைவர் பெரிய செக்யூரிட்டி வந்தார்.அவர் திரும்பவும் மொதல்லேர்ந்து விசாரணைகளை ஆரம்பித்தார்.இறுதியில் நாட்டாமை விஜயகுமார் ரேஞ்சுக்கு ஒரு உயர்ரக தீர்ப்பை சொன்னார், அது என்னன்னா “ நீங்க போயிட்டு காலைல ஒரு பத்து மணி வாக்குல இந்த டோக்கன எடுத்துட்டு வாங்க. நாங்க அதுக்குள்ள தேடி வைக்கறோம்”.

இது எப்படி இருக்கு. இவங்க அஜாக்கிரதையா இருப்பாங்களாம். நாம பொருளையும் இழந்துட்டு, பரிதவிப்போட விதியை நொந்துகிட்டே வீட்டுக்குபோய் காலைல வேலையலாம் விட்டுட்டு வந்து இவங்க முன்னாடி நிக்கணுமாம். நான் விடுவதாக இல்லை. "i wish to meet bigbazaar manager"என்றேன். “சார் உங்க பொருள் எங்கயும் போயிடாது. இங்க இருக்கு பாருங்க டோக்கன். இத கைல வெச்சிருந்தீங்கன்னா.எத்தன நாள் கழிச்சி வேண்ணா வந்து உங்க பொருள கேக்கலாம். நாங்க தந்து தான் ஆகணும்” என்றார். “அதெல்லாம் இருக்கற பொருளுக்கு. இது தொலைஞ்சி போயிடுச்சி. அது மட்டுமில்லாம. நா வீட்டுல போயி “அட்சுவலி ஐ லாஸ்ட் த பேக் இன் பிக்பஜார். பட் ஐ ஹேவ் டோக்கன்”னு வீட்டுல சொன்னா “ நீ பேக்அ தொலைச்சிட்டு எங்ககிட்ட வந்து கதை கட்டறியா?”னு வீட்டுல கேக்க மாட்டாங்களா? நீங்க அசால்டா தொலைச்சிட்டு நிப்பீங்க. கஸ்டமர் அவஸ்தைபடணும். இது தான் உங்க கஸ்டமர் சேட்டிஸ்ஃபேக்சனா? நான் ஒண்ணும் உங்கள நம்பி bag குடுக்கல. பிக்பஜார நம்பி தான் குடுத்தேன். அதனால அடுத்து என்ன பண்றது என மேனேஜர் சொல்லட்டும்” என்றேன்.

இதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. bag தொலைந்த கதையை இவர்களோடு முடித்து விடத்தான் ”காலைல டோக்கன் எடுத்துட்டு வாங்க.. பாத்துக்கலாம்” என நம்மிடம் கதை கட்டினர். பெரும்பாலும் செக்யூரிட்டி பணிகளை வேறு ஒரு நிறுவனம் பார்த்துக்கொள்ளும்.பிக்பஜாருக்கும் செக்யூரிட்டிகளுக்கும் சம்பந்தம் இல்லை.எனவே தான் மேனேஜரிடம் பேசவேண்டும் என சொன்னேன்.
சில நிமிடங்களில் மேனேஜர் வந்தார்.அவரும் வழக்கம் போல விசாரணையை முதலிலிருந்து ஆரம்பித்தார். “கேமரால பார்த்தா எங்க இருக்குன்னு தெரிஞ்சிடும்ல” என்றார். “ஆனா சார். கேமரா இந்த ஏரியாவ கவர் பண்ணாது” என அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.
அதாவது சம்பவம் நடந்த இடம் பாண்டிபஜார் பிக்பஜாரில் நுழையும் போதே இடதுபக்கம் படியேறி மேலே செல்லும் பகுதி.அங்கே பழம்,காய்கறி விற்பார்கள். கஸ்டமரின் உடமைகளை சேகரிக்கவென அங்கே தனியாக ரேக் வசதி கிடையாது. அது மட்டுமல்லாமல் அந்த பகுதியை எந்த கண்காணிப்பு கேமராவும் கண்காணிக்காது. அதாவது கடையிலிருந்து எவரும் எதையும் திருடிட்டு போகக்கூடாது.ஆனால் கஸ்டமரோடது எக்கேடு கெட்டு போனா என்ன? அதான் செக்யூரிட்டி பாதுகாப்புக்கு இருக்காரே. என்ற எண்ணம் தான் காரணம்.

”நீங்க என்ன பண்ணுங்க டோக்கனை எடுத்துட்டு காலைல வாங்க,   பிகாஸ் கண்காணிப்புகேமரா டேட்டாபேஸ் ரூமை பூட்டிட்டு போயிட்டாங்க.காலைல வந்தா பார்த்து சொல்லிடுவோம்.உங்களோடது எங்கயும் போயிருக்காது” என்றார் அவர்.இவர் எதோ பெரிய மனுசன் என்று இவரிடம் பேசினால், இவரும் அவர்கள் சொன்னதைத்தான் சொல்கிறார்.இதுல நடு நடுல ஐயோ வேற, அம்மா வேற..
கஸ்டமர்கள் எல்லோரும் கேணயன் என்ற நினைப்புதான் இதற்கு காரணம்.இவர்கள் தொலைத்ததற்கு நாம் அலைய வேண்டும். “எனக்கு எதாவது லெட்டர் மாதிரி குடுங்க.வெறும் டோக்கனை எல்லாம் ஆதாரமாக வச்சிக்க முடியாது” என்று கறாராக சொல்லிவிட்டேன்."அதெல்லாம் முடியாது. எங்களுக்கு ப்ராப்ளமாகிடும்.வேணும்னா எங்க மேனேஜர்ட்ட பேசிட்டு சொல்றேன்” என்றார்.

மேனேஜருக்கு போன் பேசப்போனார். எனக்கு ”குப்”பென்று வேர்த்துவிட்டது. என்னை தனியே ஒரு அறையில் உட்கார வைத்தார்கள். சுமார் ஒரு மணி நேரம் போன சம்பாசனைகள், வாக்குவாதங்கள். தொண்டைதண்ணி எல்லாம் வற்றி போயிருந்தது. அவர்களாகவே பார்த்து பாவமே என தண்ணி கொடுப்பார்கள் என எதிர்பார்த்தேன்.ஆனால் நடக்கவில்லை.”என்னங்க ஒரு தண்ணி கூட குடுக்காம” என பேச்சுவாக்கில் வெக்கத்தைவிட்டு கேட்டுவிட்டேன்.”இதோ சொல்லிருக்குங்க” என்றார், எதோ கல்யாணவீட்டில் சொல்வதைப்போல.

நான் தலையில் கையைவைத்து கழுத்தை கீழே தொங்கபோட்டவாறு உட்கார்ந்துவிட்டேன்.ஆசை ஆசையாக கையிலிருந்த பணத்தைக்கொண்டு fastrack bag வாங்கினேன். என் தகுதிக்கு fastrack bagஎல்லாம் கொஞ்சம் ஓவர் என்று அப்போதே மனசாட்சி சொன்னது. கூடவே 600ரூபாய்க்கு வாட்ச் வேறு.எல்லாம் பணத்திமிர்.”ஏன் 400ரூ 500ரூ வாய்கெல்லாம் bagஏ இல்லையா. இல்ல அது வாங்குனா இமேஜ் போயிடுமா. கெட்ட கேட்டுக்கு வாட்ச் வேற. மொபைல்ல தானே எப்பவும் டைம் பார்ப்ப.இப்ப என்ன புதுசா?. போச்சா? எல்லாம் போச்சா? அதுஅது தானா அமையணும்” என்பதாக எண்ண ஓட்டங்கள்.

”மேனேஜர் உங்ககிட்ட பேசணுமாம்” என என்னிடம் போனைகொடுத்தார்கள். நான் என் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தேன். நடு நடுல ”மானே, தேனே, பொன்மானே”வெல்லாம் சேர்த்து நாலஞ்சி பிட்டு நச்சுனு போட்டு வைத்தேன். “ஓகே சார். நாங்க லெட்டர் தர்றோம். நாளைக்கு காலைல வந்ததும் வீடியோல பார்க்கறோம். பார்த்துட்டு ஒருவேள முடியலன்னா அக்டோபர் 4ஆம் தேதி 3000ரூ கேஷா குடுத்துடறோம்” என்றார் பெரியமனிதத்தனமாக(?!).

”இந்தாங்க சார், உங்க அட்ரஸ், போன் நம்பர் எல்லாம் எழுதி லெட்டரா எழுதிடுங்க” என என் கையில் பேப்பர் ஒன்றை கொடுத்தார். நான் லெட்டர் எழுதிக்கொண்டிருக்கும்போதே ஒருவர் வந்து “சார் நீங்க தொலைச்ச பொருளுக்கு பில் இருக்கா” என்றார். ”இது என்னடா புது கதையா இருக்கு.திரும்ப மொதல்லேர்ந்தா?” என்பதாக நினைத்துக்கொண்டு “பில்லெல்லாம் அந்த பேக் லயே வச்சிருந்தோம்”என்றேன் யோசனை கலந்த தயக்கத்தோடு. ”தொலைஞ்ச பொருள் எல்லாம் 3000 ரூ வரும் நு நாங்க எப்படி நம்பறது” என திரும்ப ஆரம்பித்தார். “ நீங்க தொலைக்க மாட்டீங்கன்னு நம்பி என் பொருளை புதுசா உங்க கைல எப்படி கொடுத்தேனோ அது மாதிரி நீங்களும் நம்பி தான் ஆகணும்” என்றேன் பொட்டிலறைந்தவாறு. “இல்ல சார்” என தயங்கி “ஸம் ப்ரொசிஜர்லாம் இருக்கு. அதான்” என்றார்.

”எனக்கும் ப்ரொசிஜர்லாம் இருக்கு. பொருளை இழந்தது நான். என்னமோ நான் தப்பு பண்ணமாதிரி என்கிட்ட இத்தன குருக்குவிசாரணை பண்ணிகிட்டு இருக்கீங்க” என்றேன் கடுப்பாகி. “சாரி சார்.சாரி சார்” என்பதாக லெட்டர் கொடுத்தார்.

“சார் நான் அக்டோபர் 3ஆம் தேதி ஊருக்கு போறேன்.அதுக்கு முன்னாடி அமவுண்ட் தரமுடியுமா. பிகாஸ் நான் திரும்ப வர்றதுக்கு ஒன் மன்த் ஆகும்” என்றேன்.

”இல்ல சார்.எங்களுக்கு 4 நாளாவது டைம் வேணும்” என்றார்.
 கண்காணிப்பு கேமராவில் பார்த்தும் யார் எடுத்தார் என கண்டுபிடிக்க முடியவில்லையாம்.அப்ப அது எந்த லட்சணத்துல கண்காணித்ததென பார்த்துக்கொள்ளுங்கள்.

”அதனால நாளு நாள்ல பணமா கொடுத்துடறோம்” என்றார். நான் அப்போது வெளியூரில் இருந்தேன். “சார் அக்கவுண்ட்ல கிரெடிட் பண்ண முடியுமா?” என்றேன்.”இல்ல சார். நீங்க அந்த லெட்டர எடுத்துட்டு வந்து.. some formalitiesலாம் இருக்கு” என்றார். அந்த லெட்டரை ரூம்மேட் எடுத்துக்கொண்டு போனபோது “அவர் தான் வரணும்” என்று சொல்லிவிட்டார்கள் (பெட்ரோமாஸ் லைட்டேதான் வேணுமா?)

 நாள் 10/30/2012

 நாள் முழுதும் பயங்கர மழை. சென்னை திரும்பி ஒரு நாள் ஆகியிருந்தது. கையில் சுத்தமாக காசு இல்லை. கடைசி நூறு ரூபாய்.அதிலும் 30 ரூபாய் காலை சாப்பாட்டில் அவுட்.(சிக்கனமாக சாப்டேனாக்கும். மாசக்கடைசில வேற வழி) பிக்பஜாருக்கு போனால் 3000 தருவார்கள்.மதியானம் சிக்கன் பிரியாணியாக சாப்பிடலாம் என ப்ளான் செய்து, பஸ் ஏறி பிக்பஜார் அடைந்தேன்.

“நிதின் இருக்காரா?” என ஒவ்வொருவரிடமாக விசாரித்துக்கொண்டே floor ஃப்ளோராக ஏறி இறங்கிக்கொண்டிருந்தபோது, வாட்டசாட்டமான அந்த செக்யூரிட்டி நின்று கொண்டிருந்தார்.(டோக்கனை எடுத்துட்டு போய் நாளைக்கு கொண்டுவாங்கன்னு சொன்னாரே!! அவரேதான்) .”சார். நிதின் பார்க்கணும்” என்றேன். நிதின் தான் பாண்டிபஜாரிலிருக்கும் பிக்பஜாரின் கண்காணிப்பாளர்.

“ நீங்க யாரு? எதுக்காக அவரை பார்க்க வந்திருக்கீங்க?” என்றார். அதாவது என்னை அடையாளமே தெரியவில்லையாம். “ நாந்தாங்க அன்னிக்கி fastrack bag தொலைச்சது” என்ற போது, அவர் தலைக்கு மேலாக வளையம் வளையமாக சுருண்டது என் கண்ணுக்கு தெரியுமுன்னமே “ஓ நீங்களா? இருங்க அவர்ட்ட பேசறேன்” என அவருக்கு கால் செய்தார். அவர் என்னருகே வந்து “என்ன மேட்டர்” என்றார்.

அவர் விளக்கவே, “அன்னிக்கி வந்தது நீங்களா?” என்றார்.”எங்க.. என் நம்பர் உங்க கிட்ட இருக்கா? சொல்லுங்க பார்ப்போம்” என்றார் ”சொன்னேன்”. அப்போதும் நம்பவில்லை. “இருங்க என் நம்பர்லேருந்து உங்களுக்கு கால் அடிக்கறேன்” என்றேன். கால் போனது.அவர் என்னை பார்த்து சந்தேகமாகவே தலையாட்டினார். அன்னிக்கி ஒருவேள அழகா இருந்திருப்பனோ? என்றவாரு யோசித்தபோது.. அன்னிக்கி குருந்தாடி வச்சிருந்தேன். இன்னிக்கி க்ளீன் ஷேவ் செய்திருந்தது நினைவுக்கு வந்தது. (எம்ஜிஆர் திரைப்படங்களில் மருவும், ஒட்டுமீசையும் மாறுவேடத்திற்கு பயன்படுத்தியதற்கு இவர்களும் காரணமாக இருக்கக்கூடும்)

“அந்த லெட்டர் இருக்கா?” என்றார். காட்டினேன்.”இதுல ஒரு கையெழுத்து போட்டுட்டு அமவுண்ட் வாங்கிடுங்க” என்றார்.

இந்த ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் நடந்துகொண்டிருக்கும்போது, அன்று என்னிடம் bag வாங்கிய செக்யூரிட்டி என் பக்கத்தில் நின்றார். “இவர் யாருன்னு தெரியுதா?” என்றார் பெரிய செக்யூரிட்டி. அவர் புருவம் சுருக்கி, நினைவடுக்குகளில் என்னை தேடி, நீண்ட நொடிகளுக்குப்பின் “அன்னிக்கி பேக் தொலைச்சவர்” என்றார்.(உண்மையில் bagஐ தொலைச்சது அவர் தான்.. “ நான் மிஸ் பண்ணிட்டேன்ல” என்று தான் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் நாம் தான் நம் தவறுகளை ஒப்புக்கொண்டதேயில்லையே)

எல்லா ஃபார்மாலிட்டீஸும் முடிந்தது.பெரிய செக்யூரிட்டி தன் சட்டைபேக்கட்டிலிருந்து அமவுண்டை எடுக்க கைவிட்டுக்கொண்டே ரிலாக்ஸாக சொன்னார் “எங்க ஆபீஸ்லேர்ந்தும் இவரை காப்பாத்தமாட்டேனுட்டாங்க. பிக்பஜாரும் பொறுப்பேத்துக்க மாட்டேனுட்டாங்க. இவரோட சம்பளத்துளேர்ந்து தான் இந்த அமவுண்ட்ட தர்றோம். நீங்களா மனசு வச்சி அவருக்கு எதாவது பண்ணலாம்” என்றார். “ நான் என்ன பன்ணனும்” என்றேன். எனக்கு பாதி புரிந்தது.அதாவது பெருந்தன்மையாக மொத்த  பணத்தையும் அவரிடம் கொடுக்கவேண்டும் என்பதாகவும் இருக்கலாம்.  நிறைய சினிமாவில் அப்படித்தானே காட்டினார்கள்.” இல்ல சார். நீங்க அவருக்கு எதாவது பண்ணியே ஆகணும்னு கட்டாயமா சொல்லல. மனசு இருந்தா பண்ணுங்கன்னு தான் சொன்னேன். பிகாஸ், எங்க ப்ரொசீஜர் படி பில்லு இருந்தா தா அமவுண்ட் தருவோம். உங்ககிட்ட பில் எதுவுமே வாங்காம நீங்க கேட்ட அமவுண்ட்ட அப்படியே குடுத்திருக்கோம். அது மட்டுமில்லாம, அவர் மாச சம்பளமே 6000 தான். அதுலேர்ந்து கொடுக்கறோம்” என நீட்டி முழக்கினார்.

இவர்களின் அலட்சியத்தால், என்னை அலைகழித்து, மனம் நோகச்செய்து, ஒரு மாதம் காத்திருந்து, அதுவரை எனக்கு பணம் உறுதியாக வருமா என திரியாத நிலையில் “ஒரு வேள ஏமாத்திருவானோ?” என்பதாக குழம்பி நின்ற என்னிடம் பெரியமனது பற்றி சொல்கிறார்கள். உண்மையில் பெரியமனதை அவர்கள் தான் செய்யமுடியும். பிக்பஜாரிடம் இல்லாத பணமா? இல்ல அந்த செக்யூரிட்டி கம்பெனிகளிடம் இல்லாத பணமா? ”இவர் எல்லா நாளும் நல்லா வேலைபார்ப்பாரு.இப்பதான் இந்த பிரச்சினை. இதை கம்பெனி ஏற்றுக்கொள்கிறது” என அவர்கள் முடிவெடுக்க முடியாதா? அவர்களுக்கே மூவாயிரம் பெரிய பணமாக இருக்கும்போது நானெல்லாம் எம்மாத்திரம்.
இரண்டு வருடம் முன்பு கல்லூரியில் கட்ட அந்த மூவாயிரம் ரூபாய் இல்லாமல் பிரின்சிபல் முன்னால் கைகட்டி தலைகுனிந்து நின்றது இன்னும் நினைவிருக்கிறது. ஒருவருடம் முன்பு டேட்டா எண்டரி கம்பெனியில் மூவாயிரம் மாத சம்பளத்திற்காக முக்கி முக்கி கம்ப்யூட்டர் தட்டியது நினைவிருக்கிறது. இப்போதும் கூட எதுவும் மாறிவிடவில்லை. ஆனால் என்னைபார்த்து “பெரிய மனசு பண்ணுங்க” என்கிறார்கள்.

அலைச்சல், பரிதவிப்பு,வருத்தம் எல்லாமே பொருளின் சொந்தகாரர்களாகிய நமக்கு தான். தொலைத்த அவர்களுக்கு எந்த கவலையும் இல்லாததை அவர்களுடனான என்னுடைய ஒவ்வொரு கணமும் “எனக்கும் இதற்கும் எந்த கவலையுமில்லை” என்பது போல அவர்கள் நடந்துகொண்டதை பார்க்கமுடிந்தது. இந்த லட்சணத்தில் தான் நாம் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்துக்கொண்டிருக்கிறோம்.
 ”பணம் மரத்தில் காய்க்கவில்லை!!” என மன்மோகன் சொன்னது இவர்களுக்காகத்தானிருக்கும்.

Friday, October 26, 2012

ஃபேஸ்புக் ட்விட்டரில் உளறுபவர்கள் உஷார்



ஒருத்தர் பிரபலமாகிட்டார் என்பதாலேயே அவருக்கு ”எல்லாம் தெரியும்” என்ற அடிப்படையில் கேள்வி கேட்பதும்.. அவர் அந்த கேள்விக்கு ஞானசூன்யமாக பதில் சொல்வதும்.. அப்படி அவர் சொல்லும்போது “இது என்னய்யா முட்டாத்தனமா இருக்கு” என்று நாம் புலம்புவதும் கால
ம் காலமாக நடக்கிற ஒன்று தான்!!

கொஞ்சம் பிரபலமாகும் போதே நமக்கு கருத்து சொல்லும் ஆசை வந்துவிடுவது இயல்பு தான்..ஆரம்ப காலத்தில் சில நல்லகருத்துக்கள் சிலவற்றுக்கு அமோக ஆதரவு பெருகும்..(அதாவது அடுத்தவர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருப்பது மட்டும் தான் இங்கே நல்லது.அவனுக்கு பிடிக்காத ஒன்று நல்லதாக இருக்கவே முடியாது.. உதாரணம் ரோஸ் ப்யூட்டிஃபுல்னு எல்லாரும் சொல்றாய்ங்க..அதுல அப்புடி என்ன இருக்குன்னு கேட்டுபாருங்களேன்..தெரியும்

பேஸ்புக் ட்விட்டரில் எதோ பொத்தாம் பொதுவாக கருத்து சொல்வதும் எழுதுவதும் அப்படிபட்டது தான்.. ஆரம்பத்தில் நமக்கு தெரிந்த எதையாவது சொல்லி வைப்போம் “பாஸு செமயா எழுதறீங்க” என எவனாவது சொல்லிவிட “பாரேன்.. நமக்குள்ளயும் எதோ இருக்கு”ன்னு அடுத்தடுத்து சொல்ல ஆரம்பிப்போம்..

ஒரு கட்டத்தில் எதாவது சொல்வது மட்டுமே நம் வேலையாக மாறிவிடும்.. அது நல்லதோ கெட்டதோ.. நல்லதுக்கு நல்லவிதமான ரெஸ்பான்ஸ் வருகிறதென்றால்.. கெட்டதற்கு அதற்கேற்ற கூலி கிடைக்கும்..அவ்வளவே..

உதாரணமாக நல்லவிதமாக எழுதும்போது போன் செய்து “எப்புடி பாஸ் உங்களால மட்டும் இப்படி முடியுது” என்பவர்கள்.. மோசமாக எதையாவது சொல்லும்போது சானியை கரைத்து வாயில் ஊற்றுவார்கள்.. சாதாரண சாணிகள் சில சமயம் மனித சாணியை மிக்ஸ்பண்ணிக்கொண்டு வரும்.. கருத்து சொல்லும் போது இதையெல்லாம் சகித்து தான் ஆகவேண்டும்..

ஃபேஸ்புக், ட்விட்டர் என்பது ரோட்டில் நின்று கத்துவது போல.. சில சமயம் ஊரேகூடி நம்மை தலையில் தூக்கிவைத்து கொண்டாடும்.. சில சமயம் ரோட்டில் சட்டை கிழிய கட்டிஉருள வேண்டி வரும்!!

சரி கருத்து சொல்வதென்று முடிவாகிவிட்டது.. அதற்கு லைக்கு கமெண்டு வாங்கியே ஆகவேண்டுமென்ற வெறியும் வந்தாகிவிட்டது.. நாம் ஒன்று தான் செய்யவேண்டும்.. கேணத்தனமாக எதையாவது எழுதிவிட்டோமா..உடனடியாக அங்கேயே மன்னிப்பு கேட்டுவிட வேண்டும்., அதைவிட்டுவிட்டு அம்மாகிட்ட போய் கண்ணை கசக்கிக்கொண்டு நிற்பதெல்லாம் கேணத்தனம்..

சின்மயி விவகாரத்தில் நடந்திருப்பதும் இது தான்.. ரோட்டில் நின்று கத்தும் போதே மாலைக்கும், செருப்புக்கும் தயாராகிவிட வேண்டும்..தண்ணியை போட்டுவிட்டு எதையாவது உளருபவன் ரோட்டில் போகிற வருகிறவரிடம் வாங்கிக்கட்டிக்கொள்ளும் நிலை தான் நடந்தது.. ரோட்டில் திட்டுகிற எல்லோரையும் பழிக்கு பழி வாங்கத்துடித்தால் கடைசியில் “உன்னை யாரு தண்ணிய போட்டுகிட்டு கத்த சொன்னது என்ற கேள்வி தான் முதலில் வரும்”..வர வேண்டும்!!

#ஆனால் யார் தண்ணி போட்டுகிட்டு கத்துகிறார் என்பதை பொறுத்தே இங்கே நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது தான் இங்கே நிதர்சனம்

நாம் செய்யவேண்டிய வேலை இரண்டு

1) ஃபேஸ்புக்கிலோ, ட்விட்டரிலோ பிரபலங்களை பார்த்தவுடன் நாய் கரண்டு கம்பத்தை பார்த்ததும் காலைதுக்குவதை போல ரெக்வஸ்ட் கொடுப்பதை நிறுத்தவேண்டும்.

2)அவர்கள் எதாவது உளறினால் ”யார் பெத்த புள்ளையோ..தானா பொலம்புது” என விட்டுவிடவேண்டும்..

பிரபலங்கள் செய்யவேண்டியது

ஆவுன்னா எதையாவது உளறிக்கொட்டியாக வேண்டிய அவசியத்தை தவிர்ப்பது!!

Wednesday, September 26, 2012

புரட்சியாளர்

பாரதி என்ற நண்பர் சமீபத்தில் தான் பழக்கம். ஒரே அலுவலகம்.நறுக்கு தறித்தது போல பேசுவார்.சாதாரணமாக நாம் எதாவது பேசினாலும் அதில் எதையாவது புதிதாக கண்டுபிடித்து அவர் நம்மை தாக்குவார்.அது நமக்கே ஒரு மாதிரி இருக்கும்.

அந்த நண்பருக்கும் வீடு தாம்பரம் மெப்ஸ் பகுதியில் தானாம். இன்று தான் எனக்கே தெரியும்.இரண்டு பேரும் பணி சார்ந்து தான் இது வரை பேசிக்கொண்டிருந்திருக்கிறோமே தவிர, இருவருக்குமிடையே தனிப்பட்ட முறையில் விசாரணைகள் ஏதும் இருந்ததில்லை. இன்று ஒரே பேருந்தில் ஈகாட்டுத்தாங்கலில் இருந்து தாம்பரம் வரை பயணப்பட்டோம்.

“ உங்க சொந்த ஊர் என்ன? எப்படி இந்த வேலை கிடைச்சிது.இதுல தான் ஆர்வமா?” என்பதாகவெல்லாம் கேள்வி கேட்டார். நானும் ஆர்வமாக பதில் சொன்னவாறு வந்து கொண்டிருந்தேன்.பேச்சு பயங்கர சுவாரசியமாக போய்க்கொண்டிருந்தது.பேருந்தில் அவருக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பெண் “கொஞ்சம் இந்த பக்கம் வர்றீங்களா” என்பதாக தனக்கு முன்னால் இருந்த இடத்தை காட்ட நண்பரும் காரணம் என்னவென யோசித்தவாறே அந்த பெண்ணுக்கு கொஞ்சம் முன்னால் தள்ளி நின்றார்.

நண்பருக்கு என்ன காரணமென்றே தெரியவில்லை.அந்த பெண் ஏன் அப்படி சொன்னார்? நாம என்ன பண்ணோம்.என்பதாகவே யோசித்துக்கொண்டு அவ்வப்போது “சாரி பை பட்டுடுச்சி அதான்” என்று அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தார்.கொஞ்ச நேரத்தில் நண்பருக்கு சீட்டு கிடைத்துவிடவே உட்கார்ந்துவிட்டார்.அப்போதும் அந்த பழைய யோசனையிலேயே இருந்தார்.

நான் நைசாக அந்த நண்பரின் காதுக்கருகில் சென்று “பாஸ். அந்த பொண்ணு ஏன் அப்படி சொன்னதுன்னு யோசிக்கறீங்களா?” என்றேன். “ஆமாம்” என்பது போல தலையசைத்தார்.

“அது ஒண்ணுமில்லை.அந்த பொண்ணுக்கு பக்கத்தில் இருந்தவன் அவங்க மேல இடிச்சிகிட்டே இருந்தான்.அது தான் காரணம்” என்றேன்.”அப்படியா? அப்பவே சொல்லக்கூடாதா?” என்றவாரே “இருங்க, அவங்ககிட்ட என்னன்னு கேக்கறேன்” என்றார். “இவர் யார்ரா..என்ன கேக்கப்போறார்..இதை போய் எப்படி கேக்கப்போறார்..கேட்டா அவங்க என்ன நினைப்பாங்க” என்பதாக அதிர்ச்சிகலந்த யோசனையில் “அய்யோ வேண்டாம் பாஸ்” என்றேன்.

”அட இருங்க” என்றவாரே.. நான் சொல்ல சொல்ல கேட்காமல் “அவர் என்ன உங்க மேல இடிச்சிட்டிருந்தாரா” என்றார் அந்த பெண்ணிடம். அந்த பெண்ணும் “ஆமாம்.அதனால தான்” என்றார் தர்ம சங்கடமாக “தெரிஞ்சி இவர் என்ன பண்ண போறார்”என்ற ஆர்வம் அவர் கண்களில்.

”ஏங்க அவங்க மேல இடிக்கறீங்க..பஸ்ல வந்தா ஒழுங்கா இருக்கமுடியாதா?” என்று இடித்த ஆசாமியை பார்த்து நண்பர் ஓங்கி குரல் கொடுக்க.எனக்கோ தர்மசங்கடமாகிவிட்டது. “இவர் என்ன புரட்சியாளரா? இல்ல.. பொண்ணுங்களுக்கு எதாவது ஒண்ணுன்னா பொங்குவாரோ” என்பதாக இருந்தது என் எண்ணம்.

இடித்த ஆசாமியும் அசராமல் “யோவ் உனக்கு என்ன? பஸ்ல வந்தோமா நின்னோமான்னு இல்லாம” என்று நண்பரைவிட ஒருமடங்கு அதிகமாக குரல்கொடுத்தார்.

“குடிச்சிருக்கியா? சொல்லுயா..குடிச்சிருக்கியா.போலீஸ்ல சொல்லட்டுமா?” என்றார் நண்பர்.

“நான் என்ன பண்ணேன் போலீஸ்ல சொல்றதுக்கு” - இது அந்த ஆசாமி.
“எதுவுமே பண்ணாம தான் அவங்க சொல்றாங்களா?” என்பதாக அந்த பெண்ணை கைகாட்டினார்.

அந்த பெண்ணும் தனக்கு எதிரே என்ன நடக்கிறது என்று புரியாதவராக “ஆமாம்” என்பது போல அரைதலை அசைத்தார்.

அந்த ஆசாமி சுதாரித்தார்.  ”ஒழுங்கா இருந்துக்கோங்க” என்பதாக நண்பர் குரலெழுப்பினார்.

அதற்குள் அடுத்த ஸ்டாப் வந்துவிடவே, இடித்த ஆசாமிக்கு பக்கத்திலிருந்த சீட்டு காலியாகவே.அந்த ஆசாமியும் இது தான் சாக்கென்று அந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டார்.

“பாத்திங்களா.அவன் தப்பு பண்ணலன்னா..எதுக்கு தப்பிக்க பார்த்து இடம் கிடைச்ச உடனே உட்காரணும்” என்றார் நண்பர், என் காதருகே.
நான் இன்னும் அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்ற அதிர்ச்சி கலையாதவனாகவே நின்று அவரையே வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டிருந்தேன். “ஏங்க,இப்படி பண்றாங்கன்னு எங்ககிட்டயாவது சொல்லக்கூடாதா” என்றார் அந்த பெண்ணிடம். அந்த பெண் ஏதோ சொல்லதயங்க “பஸ்ல இத்தனை ஜென்ஸ் இருக்கோம். நாங்க பாத்துக்க மாட்டோமா” என்றார்.

நாங்கள் இறங்கும் நிறுத்தம் நெருங்கவே படிக்கட்டை நெருங்கியபோது படிக்கெட்டு பக்கத்து சீட்டிலிருந்த பெண் “இவனுங்கள எல்லாம் சும்மா விடக்கூடாது” என்றார் “ஆமாங்க.ஒரு வழி பண்ணனும்.இனிமே யார்கிட்டயாவது இப்படி பண்ணுவான்” என்றவாரே இறங்கினார். நானும் அவரை தொடர்ந்து இறங்கினேன்.

அவரிடம் பேசவேண்டி இருந்தது. “என்னங்க? அந்த பொண்ணுகிட்ட போய் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க” என்றேன்.

“பின்ன கேக்காம.இது மாதிரி பிரச்சினையலாம் சும்மா விடக்கூடாது” என்றார்.
“ நீங்க என்ன பாஸ் புரட்சி பேசறீங்க. அந்த பொண்ணு எப்படி ஃபீல் பண்ணிருக்கும்? நீங்க சத்தம் போட்டதுக்கு காரணம் அந்த பொண்ணுதான்னு நினைச்சி, பஸ்ல எல்லாரும் அவங்களையே பாக்க மாட்டாங்களா? அது மட்டுமில்லாம. எனக்கு சம்திங் ராங்க்னு முன்னாடியே தெரியும். நான் பஸ்ல ஏறி கொஞ்ச நேரத்துலயே, உள்ள போகலாம்னு போகப்போனா வழில இந்த ஆளு நின்னுட்டு இருக்கான்.படிக்கெட்டு பக்கத்து சீட்டுல உக்காந்துருந்தாங்கள்ல.அந்த அம்மாவ இடிச்சமாதிரி நின்னுட்டு இருந்தான்”

“இடிச்சிட்டு இருந்தானா.அப்பவே சொல்லக்கூடாதுங்களா” என்றார் நண்பர்.
“இல்ல எனக்கு கன்ஃபார்மா தெரியல.இடிச்சிட்டிருந்த மாதிரி தான் இருந்தது. அந்தம்மாவுக்கு பிறகு குண்டா வெள்ளையா உங்க பக்கத்துல நின்ன பொண்ணுக்கு முன்னாடி ஒரு பொண்ணு இருந்துதே.அது கூட அப்புறம் உட்கார்ந்திருந்தது.அவங்க மேல இடிச்சான். பிறகு தான் இந்த பொண்ணு” என்றேன்.

” நீங்க தான் பேச்சு சுவாரசியத்துல இதெல்லாம் கவனிக்கல” என்றேன் மேலும்.

“ஏங்க அப்பவே சொல்லக்கூடாதா?” என்றார் நண்பர் ஆதங்கமாக. “என்னன்னு சொல்லுவேன்.அந்த பொண்ணே எதுக்கு உங்கள இந்த பக்கம் வர சொன்னாங்க. அவங்க நினைச்சிருந்தா சத்தம் போட்டுருக்கலாம்.ஆனா சத்தம் போட்டா எல்லாரும் நம்மள பார்ப்பாங்க.அசிங்கமா இருக்கும்னு ஃபீல் பண்ணி தான் உங்கள முன்னால வர சொன்னாங்க.ஆனா நீங்க என்னன்னா..சத்தம் போட்டு இப்டி பண்ணிட்டிங்களே” என்றேன்.

“போங்க நீங்க வேற..அவங்களே அவங்களுக்கு சாதகமா பேச ஆள் இல்லைங்கறதுனால தான் அமைதியா இருந்தாங்க.அவங்க நான் பண்ணத நினைச்சி ஃபீல் எல்லாம் பண்ணிருக்க மாட்டாங்க. சந்தோசம் தான் பட்டுருப்பாங்க. நமக்காக ஒருத்தன் கேட்டான் பாரு.அப்டின்னு சேட்டிஸ்ஃபை ஆகிருப்பாங்க.என்னால பஸ்ல இருந்த மத்தவங்க மாதிரி பொட்டையா இருக்க முடியாது” என்றார்.

அந்த பொட்டை என்பது எனக்கும் சேர்த்து பொருந்தியதாகவே பட்டது.

அவரிடம் அதை சொன்னபோது “சீச்சி.. இல்ல.. சாரி” என்றார்.
 நீங்கள் விரும்பும் மாற்றம் முதலில் உங்களிலிருந்தே துவங்க வேண்டும் என்ற காந்தியின் வரிகள் எனக்கு முன்னால் சம்பவங்களாக நடந்ததாக தோன்றியது.

Sunday, September 23, 2012

சாட்டை – சேட்டை!!



ஒரு அரசுப்பள்ளி.. ”நம்ம ஸ்கூல்ல எதாவது மாற்றம் கொண்டு வரணும்” என்று உணர்ச்சிவசப்பட்டு நரம்பு புடைக்க பேசுகிற தலைமை ஆசிரியர்.அந்த மீட்டிங்கில் அவ்வப்போது அவரை மதிக்காமல் கமெண்ட் கொடுக்கிற உதவித்தலைமை ஆசிரியர்.

அந்த பள்ளிக்கு புதிதாக பிசிக்ஸ் வாத்தியாராக வேலைக்கு சேரும் சமுத்திரக்கனி முதல் முதலில் அந்த மீட்டிங்கேடு தன் எண்ட்ரியை துவங்குகிறார். எல்லா வாத்தியார்களும் “இந்த பசங்கள வச்சி மேய்க்க முடியாது” என அந்த மீட்டிங்கில் புலம்ப.. சமுத்திரக்கனியோ ஃபேஸ்புக் புரட்சியாளர்களைப்போல பிரச்சினையின் பரிமாணம் எதுவும் தெரியாமல் புரட்சிபேசுகிறார்.

எல்லோரும் அவரை எகத்தாளமாக பார்க்க..அவர் தான் விரும்பு மாற்றத்தை அந்த பள்ளியில் எப்படி செயல்படுத்துகிறார் என்பது தான் கதை. நடுநடுவே பசங்களின் காமெடியோடு உதவித்தலைமை ஆசிரியரின் காமெடியும் சேர்ந்துகொள்ள படம் இடைவேளை வரை களைகட்டுகிறது.கசப்பு மருந்தோடு இனிப்பை சேர்ந்து பறிமாறும் இயக்குனரின் இந்த முயற்சி இடைவேளை வரை நன்றாக வேளை செய்திருக்கிறது.சமுத்திரகனியின் புரட்சிவசனங்கள், மற்ற ஆசிரியர்களின் பாலிடிக்ஸை அவர் எதிர்கொள்ளும் விதம் அவர் சந்திக்கும் பிரச்சினைகள் என படம் முழுக்கவே விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை.

“நீங்கள் விரும்பும் மாற்றம் முதலில் உங்களிலிருந்தே துவங்க வேண்டும்” என்ற காந்தியின் வசனம் தான் படத்தின் ஒன்லைன்.
நேற்று தேவி தேட்டரில் ஆள் குறைவாக இருக்கும் போது “தெரியாத்தனமா வந்துட்டோமோ” என்ற எண்ணமே ஆரம்பத்தில் ஏற்பட்டது.படம் இடைவேளை வரும்போது நம்ம ஜட்ஜ்மெண்டு ரொம்ப வீக்கு. படத்த என்ன அருமையா எடுத்துருக்காய்ங்க என்று தோன்றியது.

இண்ட்ரவல் வரை கதை தான் ஹீரோவாக இருந்தது.ஆனால் இடைவேளை முடிந்த சில நிமிடங்களில் ஹீரோதன் புரட்சிகரமான கருத்துக்களால் ஹீரோயிசம் பண்ணுகிறார்.உதாரணமாக கலை விளையாட்டு போட்டிகளில் 22 வருடமாக எந்த சாதனையும் செய்திராத இந்த அரசுப்பள்ளி திடீரென தனியார் பள்ளிகளோடு போட்டி போட்டு முதல் இடம் பெறுகிறது.

கிளைமேக்ஸில் 12ஆம் வகுப்பில் மாவட்ட அளவில் சாதனை புரிவதெல்லாம் ரொம்ப ஓவர்.க்ளைமேக்ஸ் நெருங்க நெருங்க தியேட்டரில் எல்லோரும் சமுத்திரக்கனியின் பஞ்ச் பொறுக்க முடியாமல் உச் கொட்டுவதை வைத்தே நம்மாட்களின் பொறுமை ரொம்ப சோதிக்கப்படுவது உறுதி செய்யமுடிகிறது.

ஹீரோ போல வரும் பையன் நல்லா நடிச்சிருக்கான். ஒவ்வொருத்தர் ஸ்கூல்லயும் இதுபோல தடியன் யாராவது இருந்திருப்பார்கள்.ஹீரோயின் குடும்பப்பாங்கான ஃபிகராக இருப்பதால் நாமும் அவ்வப்போது ஜொல்லுகிறோம்.ஆனால் அவர்களின் சிறுபிள்ளைத்தனமான காதல் சிரிப்பை வரவழைக்கிறது. அந்த காதல் மெச்சூர்டான தளத்தை நோக்கி நகர்வது ஆர்ட்டிட்ஃபீசியலாக இருக்கிறதே தவிர கதையோடு ஒட்டவில்லை.அரதப்பழசான இது போன்ற விக்ரமன் பாணியிலான காதல்கள் தியேட்டரில் எல்லோரையும் கடுப்பேற்றுகின்றன.

எல்லோரும் அளவான நடிப்பை கொடுத்திருப்பது படத்தின் பிளஸ்.சமுத்திரக்கனி மட்டும் சீரியஸாக ஃபேஸை வைத்துக்கொண்டு காமெடி பண்ணுகிறார்.

படம் சொல்லவிரும்பும் சேதி “ மாணவர்களை மாற்ற வேண்டிய அவசியமே இல்லை. ஆசிரியர்களை தான் மாற்ற வேண்டும்” என்று படம் போதிப்பது என்னவோ உண்மை தான். ஆனால் இது அரசுப்பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் சேர்த்தே பொருந்தும். அரசுப்பள்ளி ஆசிரியர்களில் சிலர் ஒருவகை சைக்கோக்களென்றால், தனியார் பள்ளி ஆசிரியர்கள் வேறு நவீன சைக்கோ வகையை சேர்ந்தவர்கள் என்பதை சொல்ல வேறு வகை கதையம்சமுள்ள ஸ்க்ரிப்ட் தேவைப்படுகிறது. அதற்கான ப்ளாட்ஃபார்ம் தற்போது அதிகரித்துள்ளதை இயக்குனர்கள் உணர வேண்டும்.

படத்தின் கேமராவும், இசையும் வலு சேர்த்திருக்கின்றன என்றாலும், படத்தின் பின்னணி இசை, சீரியல்களில் வரும் இசையை போல வழவழ கொழகொழவாக கடுப்பேற்றுகிறது. மற்றபடி படத்தை ஒருமுறை பார்க்கலாம். காமெடி அம்சங்களுக்காக வேண்டுமானால் படம் கிராமங்களில் ஓடலாமே தவிர படத்தின் உட்கரு எல்லோரையும் சேருமா என்பது சந்தேகமே.

Sunday, September 9, 2012

தன்னம்பிக்கை கூட்டங்கள் - mindfresh


”இந்த ஐநூறு ரூபாய் யாருக்கு வேணும்”

ஒரு பெரிய ஹோட்டலில் கோட்டு சூட்டு போட்ட ஆசாமி ஒருவர், வயர்லெஸ் மைக்கை கழுத்தில் சட்டை பட்டனுக்கிடையே மாட்டிக்கொண்டு தன் போச்சிணூடே இரண்டாவது வரிசையில் இருந்த நபர் ஒருவருக்கு அருகில் சென்று கேட்ட கேள்வி தான் “இந்த ஐநூறு ரூபாய் யாருக்கு வேணும்”.. அந்த நபரின் முகத்திற்கருகே சென்று “டூ யூ வாண்ட் திஸ் ஃபைவ் ஹண்ட்ரட்”..

அந்த ஆசாமி ஒரு நிமிடம் அந்த ஐனூறை பார்க்கிறார்.. “தருவானா.. மாட்டானா...” என்பதாக அந்த ஐனூறை பார்த்தவாறே யோசிக்கிறார்.எதுக்கு வம்பு அமைதியாவே இருப்போம்.. நாம கேக்க போய் அந்தாளு எதாவது மொக்க போடப்போகிறார்.. என்ற யோசனையில் அமைதியாகவே இருக்கிறார்.


ஒட்டு மொத்த கூட்டத்தின் நடுவே சென்று “யாருக்கு வேணும் இந்த ஐனூறு”
“கைதூக்குங்க பாஸ்” என்கிறார்.. யோசித்து யோசித்து ஒவ்வொருவராக  கைதூக்குகிறார்கள்.

பேச்சாளர் கூட்டத்தை உற்று பார்த்தவாறே ” நம்மளோட நோக்கம் ஐனூறு ரூபாயில்லை.. ஐனூறு கோடி”
கூட்டத்திலிருக்கும் எல்லோரும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்க்கிறார்கள். சிலர் சிரிக்கிறார்கள்.
“டூ யூ பிலீவ் இட்..ஆர் நாட்.. வீ கேன்.. ஐ ஹேவ் மோர் எக்சாம்புல்ஸ் ஹியர்..” என தன் பேச்சை காரசாரமாக தன்னம்பிக்கை தெறிக்க நரம்பு புடைக்க பேசுகிறார்.

இது ஒரு பிசினஸ் மீட்டிங். நான் கல்லூரியில் படிக்கும்போது சும்மா போய் பாப்போமே என நுழைந்த மீட்டிங் தான் இது. பள்ளி பருவத்திலிருந்து கார்பரேட் வேலையில் சேர்ந்த பிறகு கூட நிறைய தன்னம்பிக்கை தொடர்பான சாஃப்ட்ஸ்கில் ட்ரெயினிங்குகளில் பங்கு பெற்றிருக்கிறேன்.

ஆரம்பத்தில் கலந்து கொண்ட மீட்டிங்குகளில் முடிந்து வெளியே வரும்போது ரத்தம் தெறிக்க நம்பிக்கை பொங்கி.. வெளியே வரும்போது வெறியாக வருவேன். நான் மட்டுமல்ல. என்னோடு நிறைய பேர் இதே மாதிரிதான்.விக்ரமன் படத்தில் வருவது போல ஒரே ராத்திரியில் ரத்தன் டாட்டா ஆகிவிட வேண்டுமென்ற வேகம் வரும். கூட்டத்தில் பேசுபவர்கள் கை நிறைய வடிவேலு காமெடிகளை அள்ளி வீசியவாறே அம்பானி கதைகளையும், அமெரிக்க ஆசாமிகளை பற்றியும்  அள்ளி விடுவார்கள். நடு நடுவே டி.ஆர் போல ரெண்டு மூணு நச் பஞ்ச்கள் இடம் பெறும். வெளியே போகிறவரை நல்லா பொழுது போகும்.வீட்டுக்கு போய் டிவியை ஆன்செய்கிறவரை தான் தன்னம்பிக்கையும் டைம் மேனேஜ்மெண்டும்.அதன்பிறகு சேப்டர் கொளோஸ்.அடுத்த வேலையை பார்க்க போய்விட வேண்டியது தான்.

தன்னம்பிக்கை மீட்டிங்குகளில் பங்கு பெறும் பலரின் நிலையும் இதே தான்.ஒவ்வொரு வருடமும் புத்தகத்திருவிழாக்களில் தன்னம்பிக்கை புத்தகங்கள் சக்கைபோடு போடுகின்றன.அதன் கதை வேறு.பத்து பக்கம் தாண்டியதும் மட்டையாகிடுவோம்.தன்னம்பிக்கை என்பது என்னைப்பொறுத்தவரை ஒரு போதை.இங்கே கார்பரேட் டிரெயினிங் என்பதும், ஸாஃப்ட் ஸ்கில் ட்ரெயினிங் என்பதும் குடிசைதொழிலாகி ரொம்ப நாளாகிறது.டாஸ்மாக் செய்யும் அதே வேலையை காசைவாங்கிக்கொண்டு இவர்கள் செய்கிறார்கள்.



உண்மையிலேயே இது போன்ற ட்ரெயினிங் எடுக்கிறவர்கள் நம் வாழ்க்கையை மாற்றுவதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், அவர்கள் வாழ்க்கையை மாற்றியிருக்கிறார்களா. இது போன்ற நிகழ்ச்சி எடுப்பதற்கு என்னதான் கல்வித்தகுதி? வெறுமனே பேச்சுத்திறமை மட்டும் போதுமா. இணையத்திலிருந்து சில தகவல்களை பவர்பாயிண்டில் புகுத்தி இரண்டு மூன்று வடிவேலு காமெடியை சேர்த்து அடித்து விட்டால் வேலை முடிந்ததா? என்ற கேள்விகள் இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்குபெறும் ஒவ்வொரு முறையும் எனக்கு ஏற்படும்.

சென்னை ஐஐடிஎம் ரிசர்ச் சென்டர்.. இன்று காலை ஒரு சாஃப்ட்ஸ்கில் ட்ரெயினிங்.இந்த முறை நிறைய எதிர்பார்ப்பு.காரணம் நண்பர் ஒருவர் சொன்னது.”எடுப்பவர் மற்றவர் போலல்ல.சைக்காலஜிஸ்ட்.மைண்ட் ட்ரெயினர்”.பெயர் கீர்த்தன்யா.பதினைந்து ஆண்டுகளாக மைண்ட் ட்ரெயினராக பணியாற்றிவருகிறார் என்ற தகவல்.குழந்தைவளர்ப்பு பற்றிய சைக்காலஜிக்கல் தொடர் ஒன்றை திருச்சி தினமலர் பெண்கள் மலர் பதிப்பில் எழுதியபோது நான் படித்திருக்கிறேன்.

பெரும்பாலும் சைக்காலஜிஸ்டுகளெல்லாம் லெக்சரர்களை போல மணிக்கணக்காக பாடம் நடத்தி நம்மை தாலாட்டி தூங்க வைப்பார்கள் என்ற என் நம்பிக்கையை கீர்த்தன்யா தவிடுபொடியாக்கிவிட்டார்.இத்தனைக்கும் ஒரு வடிவேலு காமெடிகூட இல்லை. நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசி பீட்டர் விடாமல் நமக்கு தெரிந்த பரிச்சயமான வார்த்தைகளையும் உதாரணங்களையும் பயன்படுத்தி அழகாக, நேர்த்தியாக தேர்ந்தெடுத்த வார்த்தைகளை போட்டு மெல்லிய குரலில், அட்வைஸ் பண்ணுகிற தொணி ஏதுமில்லாமல் அவர் பேசும் பேச்சை நாள் முழுக்க கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருந்தது.

”நம் மனதுக்கு அதீத சக்தி இருக்கிறது. அது தான் நினைப்பதை கண்முன்னே நடத்திக்காட்டவல்லது” என்ற சைக்காலஜிக்கல் கலந்த அறிவியல் தான் தலைப்பு.தலைப்பும், சொல்ல வந்த கருத்தும் அறிவியல்பூர்வமானதாக இருந்தாலும், யாராலும் நம்ப முடியாத கருத்துக்களை உள்ளடக்கியது என்பதால் விளக்குவது சிரமம்.காரணம் கொஞ்சம் ஏமாந்தால் கேட்பவர்கள் கடவுளை உள்ளே இழுத்துக்குழப்பிக்கொள்வார்கள்.இல்லையென்றால் பீலா என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள். ஜக்கியும்,கார்பரேட் சாமியாரான சுகபோதானந்தாவும் போலல்லாமல்ஆன்மீக உதாரணங்கள் ஏதுமில்லாமல் சில அறிவியல் ரீதியான விளக்கங்கள் தான் கீர்த்தன்யாவை தனித்துகாட்டுகிறது.


மூளை எப்படி தகவல்களை உள்வாங்குகிறது,அது எப்படி தான் நினைப்பதை கண்முன்னே நிகழ்த்திக்காட்டுகிறது, அது ஏற்படுத்தும் தாக்கம் நமக்குள்ளும் நமக்கு வெளியேயும் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பற்றி குழப்பாமல்,முக்கியமாக தூக்கத்தில் தள்ளாமல் ,தலைப்புக்குள்ளேயே நம்மை சிக்கவைத்து மிகத்திறமையாக யோசிக்க வைக்கிறார் கீர்த்தன்யா.கூடவே சில பயிற்சிகளும் நம்முள் எதோ ஒரு அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன.

சொல்லப்போனால் சுகிசிவமும்,கோபிநாத்தும் கொடுத்துவிடமுடியாத சில அசாத்திய நம்பிக்கைகளை இவரின் அறிவியல் பூர்வமான பேச்சு  நமக்கு கொடுக்கிறது.

நிகழ்ச்சி முடிந்து வெளியே வரும் போது ரொம்ப நாள் முன்னால் படித்த ஒரு சைக்காலஜிகல் கதை நினைவுக்கு வந்தது.அது கீர்த்தன்யாவின் மைண்ட் ப்ரோக்ராமோடு நேரடி தொடர்புடையது.

ஒரு கோழிக்குஞ்சுகூட்டத்துக்குள் துரதிருஷ்டவசமாக ஒரு கழுகுக்குஞ்சு சிக்கிக்கொள்கிறது. கோழிக்குஞ்சு வளர வளர கழுகுக்குஞ்சும் வளர்கிறது.எல்லாமே வளர்ந்து பெரிதானதும் கோழிக்குஞ்சுகளுக்கு மத்தியில் வளரும் கழுகு தன்னை கோழியாகவே நினைத்து, கோழியின் மேனரிசத்தோடே வளர்கிறது.வளர்ந்த அந்த கோழிகளோடு இந்த கழுகு விளையாடுவதை தூரத்திலிருந்து ஒரு வேடன் பார்க்கிறான்.
அவனுக்கு ஆச்சரியம்.கழுகு கோழிக்குஞ்சை அடித்து சாப்பிடும் குணம் கொண்டது.”இது எப்படி இந்த கூட்டத்தில்? அதுவும் பறக்க முடியாமல் தடுமாறியவாறு” என்ற கேள்வி அவனுக்குள்.

 கார்மேகங்கள் சூழ்ந்து மழை வரும் அறிகுறி தோன்றும் வேளையில் எல்லா ஜீவராசிகளும் தங்களுடைய கூடுகளில் அடைபட்டுக்கொள்ளும்.ஆனால் கழுகு தான் அந்த மேகத்தையும் தாண்டி வானத்தில் பறக்கும்.அதன் கனவு அவ்வளவு பெரிது.

ஆனால் அந்த கழுகு கோழிக்கூட்டத்துக்கு மத்தியில். அந்த கழுகுக்கு அதன் பலத்தை உணர்த்துகிறான் வேடன்.அனுமானுக்கு ஜாம்பவான் உணர்த்தியதை போல.பின்அது வானில் சிறகடித்து பறக்கிறது. நாமும் கூட கோழிகளுக்கிடையில் வளர்ந்த கழுகுதான். கீர்த்தன்யா போல யாரோ ஒருவர் தெளிவான விளக்கத்தோடு தேவைப்படுகிறார்.அவ்வளவே!!

கீர்த்தன்யாவின் நிகழ்ச்சி பற்றிய அறிய mindfresh.in

Monday, September 3, 2012

இனி நான் பத்திரிக்கையாளனாகவே போவதில்லை


இனி நான் பத்திரிக்கையாளனாகவே போவதில்லை

கல்லூரி மூன்றாவதாண்டு படித்துக்கொண்டிருக்கும்போது விகடன் மாணவர்பத்திரிக்கையாளர் திட்டத்தில் தோல்வியுற்றபோது இப்படி தான் நினைத்திருந்தேன்.சென்னையில் காக்னிசண்ட் மென்பொருள் நிறுவனத்தில் பிபிஓ பிரிவில் சேர்ந்த போது அதை மீண்டுமொருமுறை உறுதி செய்திருந்தேன்.

அப்போது காக்னிசண்ட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த புதிது.மாமா வீட்டில் தான் தங்கி இருந்தேன்.ஒரு ஞாயிற்றுக்கிழமை மெயில் செக் செய்துகொண்டிருந்தேன். “புதியதலைமுறை பத்திரிக்கையாளர் திட்டத்தில் முதல்கட்டத்தேர்வில் தேர்வாகியுள்ளீர்கள்.அடுத்தக்கட்ட எழுத்துத்தேர்வு திருச்சியில் நடக்கிறது.இது தொடர்பான கடிதம் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது.அதை எடுத்து வந்து பங்கு பெறவும் என்பதாக அந்த மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அம்மாவுக்கு உடனடியாக போன்செய்தேன்.

லெட்டர் எதாவது வந்துருக்கா
ஆமா,புதியதலைமுறையிலிருந்து வந்திருக்கு
எதுக்கு சொல்லலை
உனக்குதான் வேலை கிடைச்சிடுச்சே.அதான்.எப்புடியும் போகப்போறதில்லை
யார் சொன்னா
அப்ப போகப்போறியா
ஆமா
ஏற்கனவே வேலையில இருந்துகிட்டே இதுல எழுதறது எல்லாம் நடக்கற காரியமா. நாய் வாயை வெச்ச மாதிரி எல்லாத்தையும் இழுத்து விட்டுக்கறதே உனக்கு வேலையா போச்சி
யம்மா..அப்படி சொல்லாத உனக்கு தான் என்னைப்பத்தி எதுவும் தெரியல.காலேஜ் படிச்ச அப்பதான் எதுவும் கிடைக்கல. இப்பவாவது வாய்ப்பு கிடைச்சிருக்கு போகலாம்னு பாத்தா நீ மொக்க போட்டுகிட்டு இருக்க
அப்ப நீ திருச்சி வரப்போறியா
தெரியல.இன்னும் முடிவு பண்ணல
சரி எதுவா இருந்தாலும் யோசிச்சிக்கோபரஸ்பரம் இருவரும் போனை அணைத்தோம்.

நீண்ட யோசனைக்கு பிறகு புதியதலைமுறை அலுவலகத்திற்கு போன் செய்தேன்.சென்னையிலிருப்பவர்கள் சென்னையில் கலந்து கொள்ளலாம் நோ ப்ராப்ளம்என்ற பதில் எனக்கு சந்தோசத்தை கொடுத்திருந்தது.

எழுத்துத்தேர்விலும், நேர்முகத்தேர்விலும் எப்படியோ தேர்வாகி இருந்தேன்.இந்த முறை இரண்டு நாள் பயிற்சி வகுப்பு சென்னையில் நடப்பதாக லெட்டர் வந்திருந்தது. வீட்டில் கடுமையான எதிர்ப்பு. பத்திரிக்கை வேலை சோறு போடாது.உருப்படாம போய்டுவ.இப்ப இருக்கற வேலையையும் கெடுத்துக்காத... உனக்கு என்ன எழுத வரும்.. எழுதறதுன்னா சும்மாவா...என பயங்கறமாக என்னை மோட்டிவேட் செய்தார்கள்.

காதலில் ஜெயிக்க விரும்புபவர்களும், மீடியாவில் ஜெயிக்க விரும்புபவர்களும் அம்மா அப்பாவை பகைத்தே ஆக வேண்டும் என்பது சமூக நியதி. இரண்டுமே வாழ்க்கை தொடர்பானது. என்பதை அப்போதுதான் உணர்ந்திருந்தேன். வெற்றி கரமாக அவர்களிடம் சண்டை போட்டு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன்.

ஆரம்பத்தில் சுமாராக தான் எழுதினேன். அப்புறம் நிறைய முயற்சி செய்தேன்.கொஞ்சம் கொஞ்சம் கற்றுக்கொண்டேன். குழந்தை நடை பயில்வதை போல. நான் நடை பழுகுவதை அவர்கள் பார்க்க பார்க்க அவர்களுக்குள்ளும் மெல்ல மெல்ல மாற்றம் நடந்ததை என்னால் பார்க்க முடிந்தது.

பத்திரிக்கையில் வாரம் வாரம் எதையாவது எழுதிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் எழுத ஆரம்பித்திருந்தேன். காக்னிசண்டில் இரவு நேரப்பணி.பகலில் பத்திரிக்கை பணி.எல்லா நாட்களிலும் அல்ல. வாரம் இரண்டு நாட்கள் மட்டும்.

டேய் உடம்ப கெடுத்துக்காதடா. நல்லா நிம்மதியா தூங்கி ரெஸ்ட் எடு.பத்திரிக்கை எல்லாம் எதுக்குஎன்பதாக பாசம் பொங்கினார்கள்.

 என்னுடைய ஒரே நோக்கம் ஜெயிப்பதல்ல. அம்மா அப்பா பேச்சை கேட்கக்கூடாது என்பதாக மாறியிருந்த காலம் அது. அதே நேரம் வேறு வகையான நெருக்கடி பிறந்திருந்தது.காக்னிசண்டில் என் டீமில் நெருக்கடியான காலக்கட்டம் அது. வேலை எங்காவது தேங்கினால் எல்லா கேமராவையும் என் மேல் ஃபோகஸ் செய்வார்கள்.

“உன்னோட எய்ம் என்ன?என் சீனியர் ஒருவர் பாசமாக என் தோளில் கைக்கொண்டே இவ்வாறு கேட்டார்.

“சமஸ் மாதிரி ஒரு பெரிய பத்திரிக்கையாளரா ஆகணும்என்றேன்.

அப்ப என்ன பண்ணனும். எதாவது ஒண்ணுல கான்சண்ட்ரேட் பண்ணனும்.இதுல பாதி அதுல பாதின்னு இருக்க கூடாது

இத்தனைக்கும் காக்னிசண்டில் நான் ஒழுங்கா வேலை பார்க்காமலெல்லாம் இல்லை. இரண்டு முறை சிறந்த பணியாளர் விருது வாங்கி இருந்தேன்.(Wah award). அதுமட்டுமல்லாமல் ஒரு வருடம் முழுவதும் லீவே எடுக்காததுக்கு ஒரு விருது வழங்கி இருந்தார்கள்.

அங்கே வேறு யாருக்கும் இது போல வேறு உருப்ப்படியான வேலை கிடையாது.அதனால் வேலை எங்காவது தேங்கினால் நம்மை அட்டாக் பண்ணுவார்கள்.

எப்படியோ எல்லோரையும் சமாளிக்க பழகி இருந்தேன். சமீபமாக அதீத பணியின் காரணமாக பத்திரிக்கையில் எழுதுவதை தற்காலிகமாக நிறுத்தி இருந்தேன்.

“என்னடா பத்திரிக்கையில உன்னோடது எதையுமே காணோம்என் அப்பா விசாரிக்கிறார்.

ஆபீஸ் பிளாக்கில் எழுதுவதை பார்த்துவிட்டு “பையனை சாதாரணமா நினைக்காதீங்க..பத்திரிக்கையிலலாம் எழுதறான்என்றார் அலுவலகத்தில் அன்று அட்வைஸ் செய்த அந்த அண்ணன்.

புதியதலைமுறை பத்திரிக்கையில் சேர்ந்த பிறகு வாழ்க்கை பற்றிய என் பார்வை மாறி இருக்கிறது உண்மை. பத்திரிக்கை பற்றிய பார்வையும் மாறி இருக்கிறது. நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது.சொல்லப்போனால் முழு நேர பத்திரிக்கையாளருக்கு கிடைத்த அதே அனுபவம் எனக்கும் கிடைத்திருக்கிறது.

கல்லூரியில் விஸ்காம் அல்லது ஜெர்னலிஸம் பாடம் எடுக்க வேண்டும் என்பது என் பள்ளி ஆசை.அந்த வருத்தத்தையெல்லாம் புதியதலைமுறை நிறைவு செய்தது.

நேற்று மாலை ஆசிரியர் திரு மாலன் அவர்களின் கையால் “2011 ஆம் ஆண்டிற்கான சிறந்த பயிற்சி பத்திரிக்கையாளர்என்ற அங்கீகாரத்தை வாங்கிய அந்த கணம் மறக்க முடியாததாக ஆனதற்கு காரணம்.
நான் இது வரை எந்த பத்திரிக்கையிலும் கதை கட்டுரை ஏன் வாசகர் கடிதம் கூட எழுதியிருந்ததில்லை. பத்திரிக்கையில் சேரும் வரை எப்படி எழுதவேண்டும் என சுத்தமாக தெரியாது.

சிறந்த பயிற்சிபத்திரிக்கையாளர் விருது வாங்கிய போது எனக்கு காந்தியின் வரிகள் தான் நினைவுக்கு வந்தது.

ஆரம்பத்தில் யாருமே கண்டுக்கொள்ளமாட்டார்கள்..
அப்புறம் எல்லோரும் பார்த்து சிரிப்பார்கள்..
பிறகு எல்லோரும் சண்டைக்கு வருவார்கள்.,
கடைசியில் நீங்கள் ஜெயித்திருப்பீர்கள்..

இப்பொழுது வரை என்மேல் பெரிய நம்பிக்கை வைத்திராத என் அம்மா அப்பாவிற்கு இதை சமர்ப்பிக்கிறேன்.