திருட்டு விசிடி பிரச்சினை, தியேட்டர்களின் ஏகபோக உரிமை, நல்ல படங்களின் இருட்டடிப்பு, போட்ட பணத்தை எடுக்க முடியாமல் ப்ரொடியூசர்கள் தலையில் துண்டு போட்டு ஓரமாக உட்கார்வது என தமிழ் சினிமா உலகத்தில் இருக்கிற சங்கடங்கள், சச்சரவுகளை ஒரு தனி புத்தகமாக வெளியிடும் அளவுக்கு நீளும். அந்த சர்ச்சையின் சமீபத்திய வரவு தன்னுடைய படத்தை டிடிஎச்சில் வெளியிடுவதாக கமல் அறிவித்தது.
”நீங்க டிடிஎச்சில் படத்தை வெளியிட்டால் நாங்க தலையில் துண்டை போட்டுக்க வேண்டியது தான்” என தியேட்டர் உரிமையாளர்களும், வினியோகஸ்தர்களும் ஒரு புறம் களம் இறங்க, திருட்டு விசிடியால் விழி பிதுங்கி இருக்கும் தமிழ் சினிமாவை காப்பாற்ற இது போல புதுசா எதாவது செய்து தான் ஆகணும் என கமலுக்கு பக்கபலமாக திரையுலக ஜாம்பவான்கள் சிலர் குரல் கொடுக்க, சிலரோ எதுக்கு வம்பு என அமுக்கி வாசிக்கிறார்கள்.
இதற்கிடையே படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக சில சர்ச்சைகுரிய காட்சிகள் இருப்பதாக தகவல் கசிய, இஸ்லாமிய அமைப்புகள் சில ஆர்பாட்டத்தில் குதித்தன. இது போதாதென்று ரீஜெண்ட் சாய்மிரா எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் மர்மயோகி படம் தயாரிக்க வாங்கிய பணத்தை கொடுத்துவிட்டு படத்தை ரிலீஸ் செய்யவும், என ஹைகோர்டு படிகளில் ஏறி இருக்கிறது.இந்த வழக்கு தொடர்பான விசாரணை 8ம் தேதி உயர் நீதிமன்றத்தில் நடக்க இருக்கிறது.
விஸ்வரூபம் படத்தின் ஏகபோக உரிமை ஏர்டெல் டிடிஎச்சுக்கு 50 கோடிக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியாகி, ரிலயன்ஸ் டிடிஎச் முதலான நிறுவனங்களும் பேரம் பேசி வருவதாக தகவல். படம் வெளியாவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பே டிடிஎச்சில் வெளியாகும் படத்தை காண 1000 வசூலிக்கப்படும் என அதிகாரப்பூர்வ தகவல் உலா வருகிறது. 30லட்சம் பேர் திரைப்படத்தை காண புக் செய்துவிட்டதாக ஃபேஸ்புக்கில் ஒரு வதந்தி பரவி இருக்கிறது.
இப்படியாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதிய புதிய தகவல்கள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. தமிழ் சினிமாவைப்பொறுத்த வரை துணிச்சலான பல முடிவுகளை இப்போதுள்ள நிலைமையில் கமலைத்தவிர வேறு யாரும் எடுக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் திரைப்படத்தயாரிப்பாளராக தன்னுடைய படத்தை சந்தைப்படுத்த புதிய யுக்திகளை கடைபிடிக்க வேண்டிய நெருக்கடியில் அவர் இருக்கிறார்.அவருடைய பொருளை அவர் எப்படி வேண்டுமானாலும் விற்கலாம், வீணடிக்கலாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இதற்காக அவரிடம் யாரும் சண்டைக்கு போக முடியாது. வேண்டுமானால் அவர் கேட்கிற பணத்தை கொடுத்துவிட்டு யார் வேண்டுமானாலும் அந்த படத்தை வாங்கி ஆண்டு அனுபவித்துக்கொள்ளலாம்.பிரச்சினையில்லை.
அதே சமயம்,சில நியாயமான சந்தேகங்களும், பயங்களும் திரையுலகில் ஏற்பட்டிருப்பது கவலைக்குறியதே. காரணம் டிடிஎச்சில் வெளியிடும் இந்த யுக்தி வெற்றி பெற்றுவிட்டால், அடுத்து நிறைய படங்கள் இதே போல வெளியாகி தியேட்டர்களுக்கான தேவையில்லாமல் போய்விடலாம் என்ற பயம் நியாயமானதே. இப்போதே அலெக்ஸ் பாண்டியன், கடல் முதலான படங்களின் டிடிஎச் வெளீயீடு பற்றிய அண்டர்வேர்ல்டு பேச்சுவார்த்தைகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
நம்மூரில் தியேட்டரில் படம் பார்ப்பது என்பது ஒரு கலாச்சாரமாகிவிட்டது. அதை அவ்வளவு சீக்கிரம் யாரும் மாற்றிவிடமுடியாது. தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவமே வேறு பரிமாணத்தை எட்டி இருப்பதை சமீபகாலமாக நாம் உணர முடியும். உதாரணமாக படையப்பா படம் வெளியாகும் காலம் வரை குடும்பம் குடும்பமாக படம் பார்ப்பது என்றிருந்த கலாச்சாரம் மாறி.தனித்தனியாகவோ, இளைஞர் சாரார் மட்டுமாகவோ, காதலன்,காதலி என ஜோடியாகவோ படம் பார்ப்பது என மாறி இருக்கிறது.இப்போது டார்கெட் ஆடியன்ஸ் என்பது ரொம்ப சுருங்கிவிட்டது. உதாரணமாக துப்பாக்கி போன்று சமீபகாலமாக வருகின்ற படங்கள் முழுக்க முழுக்க இளைஞர்களை மையப்படுத்தியே எடுக்கப்படுகின்றன.
இதனால் பெருசுகளும், இரண்டாம் தர பெருசுகளான 40 வயதினரும் வீட்டில் உட்கார்ந்து பழைய பாடல்களை பார்த்துக்கொண்டு “அந்த காலம் போல வருமா” என வெட்டி நியாயம் பேசுவதுமாகவும், பெண்கள் சீரியல் உலகப்போரில் மூழ்கி உயிருக்கு ஆபத்தில்லாமல் கண்ணைக்கசக்கி வருவதையும் நாம் கண்கூடாக பார்க்க முடியும்.இந்த ஆடியன்ஸ் இப்போது டிவி அடிமையாகிவிட்டனர். இவர்கள் காலங்களில் இருந்தது போலான தியேட்டர்கள் இப்போது இல்லை. வரிசையில் முட்டி மோதி சண்டை போட்டு சட்டை கிழிய டிக்கெட் வாங்கிய காலமெல்லாம் மாறிவிட்டது.
முன்கூட்டியே ஆன்லைனில் டிக்கெட்டை புக் செய்துவிட்டு, படம் துவங்குவதற்கு பத்து நிமிடம் முன்பு ஹாயாக தியேட்டருக்குள் நுழைந்தால் போதுமானது.இன்னும் சில இடங்களில் கரண்ட் பிரச்சினையால் பல தியேட்டர்கள் ஜெனரேட்டர் கொண்டு இயங்கி கட்டுபடியாகாமல் கடையை சாத்திக்கொண்டு இருக்கின்றன. இதை எல்லாம் ஒப்பிடும் போது டிடிஎச்சில் வெளியிட்டு டிவி ஆடியன்ஸை கவர் செய்வது தவிர்க்க முடியாததாகிறது.
அதுமட்டுமல்லாமல் சமீபகாலமாக பல நல்ல படங்கள் தியேட்டரில் வெளியிட முடியாமல் திணறி வருவதும், கம்மியான தியேட்டர்களில் வெளியிடப்பட்டு கல்லாகட்ட முடியாமல் திண்டாடி வருவதுமாக இருக்கின்றன. உதாரணமாக ”நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்” படம் செப்டம்பர் மாதமே வெளியிடப்பட்டிருக்க வேண்டியது. தியேட்டர் பிரச்சினை, உட்பட்ட காரணங்களால் இரண்டு மாதம் தள்ளி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் சமயம் மற்றவர்களின் படங்கள் இருட்டடிப்பு செய்யப்படுவதை சம காலத்தில் கண்கூடாக நாம் பார்க்க முடிகிறது.
ஒரு படத்தை பிரிண்ட் போட 60 ஆயிரம் ரூபாய் ஆகிறது.1000 தியேட்டர்களில் வெளியிட வேண்டுமானால்? தயாரிப்பு செலவை இதுவே குடித்துவிடும். குறைந்த பட்ஜெட்டுகளில் படம் எடுக்க முடியாததற்கு இதுவும் ஒரு காரணம்.ஆனால் Qube வந்த பிறகு சாட்டிலைட் வழியே படம் ஒளிபரப்பட்டு விரயமாகும் பணம் மிச்சப்படுத்தப்பட்டிருக்கிறது. அதுபோல தான் டிடிஎச்சும்.
எப்படியும் தியேட்டருக்கு வருகிறவர்கள் வர தான் செய்வார்கள். காரணம் தியேட்டர் தரும் அனுபவத்தை ஒரு போதும் டிவியோ மற்ற தொழில் நுட்பமோ குடுத்துவிட முடியாது.ஆனால் எண்ணிக்கை குறைய வாய்ப்புகள் அதிகம்.விஸ்வரூபம் படத்தை 1000 ரூபாயில் வெளிடுவதால் அது எப்படியும் போட்டதை எடுத்துவிடும்.
ஒரு குடும்பத்தில் 10 பேர் கூட்டாக உட்கார்ந்து பார்த்தாலும் தலைக்கு 100 ரூபாயாக கணக்கு ஆகிறது.அதனால் பெரிய பாதிப்பில்லை. அது மட்டுமல்லாமல் ஒரே ஒரு முறை தான் டிடிஎச்சில் வெளியிடப்படும் என்பதால் பெரிய அளவில் கவலைப்படத்தேவையில்லை. டிடிஎச்சை கணினியோடு இணைத்து ரெக்கார்டு செய்துவிட்டால் என்ன செய்வது, கேபிளில் இலவசமாக எல்லோருக்கும் ஒளிபரப்பிவிட்டால்? ஒரு வேளை கரண்டு போச்சின்னா? போன்ற கேள்விகள் எழத்தான் செய்யும். டிடிஎச்சில் வெளியான பின் தான் அது வெற்றியா தோல்வியா என தீர்மானிக்க முடியும்.
தோல்விஅடைந்தால் - அடுத்து எந்த படமும் இது போன்ற முயற்சிகளில் இறங்காது.
வெற்றி அடைந்தால் - அடுத்து வருகிற படங்கள் எல்லாம் மெல்ல மெல்ல டிடிஎச்சில் தலை காட்டும்.
தியேட்டருக்கு போகறதுக்கு பதில் டிவிலயே பார்த்துடலாம் என்ற சோம்பேறித்தனம் மெல்ல பரவ ஆரம்பிக்கும். ஹோம்தியேட்டர் விற்பனை சக்க போடு போடும். மெல்ல மெல்ல தியேட்டர்கள் குறைய ஆரம்பிக்கும். படத்தின் தயாரிப்பு செலவு குறைகிற அதே நேரத்தில் லோ பட்ஜெட் படங்கள் நிறைய வரும். இப்போதே 5டி வருகையால் படம் எடுப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துவிட்டது. ஒருவேளை படம் எடுப்பது சுய தொழில் ஆரம்பிப்பது போலவோ, குடிசைத்தொழில் போலவோ ஆகலாம். வெள்ளிக்கிழமை மட்டும்தான் படத்தை வெளியிட முடியும் என்ற நிலை மாறும். ஆண்டுக்கு நூறிலிருந்து 200 படங்கள் வெளியாவதென்பது பல மடங்காகலாம்.
ஒரு கட்டத்தில் எந்த மாதிரியான படங்கள் வெளியாக வேண்டும், எவை கூடாது, இவ்வளவு எடுத்து வச்சாதான் படத்தை வெளியிடுவோம் என டிடிஎச் நிறுவனங்கள் ஏகபோக ஆட்சி செய்யும் நிலையை கூட இது வித்திடலாம்.
ஆனால் எல்லாமே விஸ்வரூபம் வெளியான பின் தான் தெரியும்.ஆனால் படம் எப்படியும் வெளியாகியே தீரும். காரணம் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாற்றம் நம்மை வந்தடைந்துகொண்டே இருக்கிறது.