Wednesday, November 12, 2014

சிவநேசன் என்றொரு வார்டன்!

whatsappல் ஒரு வீடியோ வந்திருந்தது.. முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் ஒரு வாத்தியார் மாணவர் ஒருவரை ஜெயில் வார்டன் மனநிலையில் தாக்கும் ஒரு வீடியோ.. எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேருக்கு பகிருங்கள் என்ற கோரிக்கையோடு வந்திருந்த வீடியோ அது! நாமெல்லாம் வாத்தியாரிடம் அடியே வாங்காத சமூகத்திலிருந்தா வந்தோம்? நாம பாக்காத அடியா? மிதியா?

என்ன அப்போதெல்லாம் facebookஓ whatsappஒ இல்லை அவ்வளவே.! இப்போதெல்லாம் மாணவர்கள் வாத்தியார்களை facebookலும் whatsappலும் டீல் செய்துகொள்கிறார்கள்! பவர் ஸ்டாருக்கு தனியே ஆரம்பிக்கும் பேஜ் போல இவர்களுக்கும் ஒன்றை ஆரம்பித்து மைம் உருவாக்கி கலாய்த்து நொங்கெடுக்கிறார்கள்!

நான் படித்த போதெல்லாம் எல்லா அடியையும் பல்லை கடித்துக்கொண்டு வாங்கிக்கொண்டு "மவனே டிசி மட்டும் கைல கிடைக்கட்டும்.. உன் சங்க கடிச்சி துப்பறேன்" என்று நினைத்துக்கொள்வோம்!
பள்ளியில் நான் ஹாஸ்டலில் படித்தபோது சிவநேசன் என்றொரு வார்டன் இருப்பார்! பயங்கர கருப்பாக இருப்பார்! சாரி.. கருப்பா பயங்கரமா இருப்பார்! study hallக்கு அவர் வருகிறார் என்றாலே எவ்வளவு பெரிய ரவுடியும் கப்சிப் ஆகி விடுவான்!

அவரிடம் சிக்குகிறவன் டெல்லி ஜூவில் புலியிடம் மாட்டிய குட்டிபையன் போல கூனி குறுகி எவ்வளவு தெய்வங்களை வேண்டினாலும் காப்பற்றப்படாதவனாக சிக்கி சின்னாப்பின்னமாவான்! அவரின் அடியை வாங்கிவிட்டால் உலகில் எப்படிப்பட்ட அடியையும் தாங்கி விடும் தெம்பு வந்துவிடும்!

பத்தாவது முடிச்சி டிசியை கையில் வாங்கிய கையோடு அவரை பழி வாங்க திட்டமிட்டவர்கள் ஏராளமானவர்கள்! ஆனால் அவர் அன்னைக்கி மட்டும் தலைமறைவாகி விட்டாரோ, அல்லது டிசி வாங்கிய சந்தோசத்தில் அவரை மறந்துவிட்டார்களோ என்னவோ.. சமீபத்தில் பள்ளி விழா ஒன்றில் அவரை நான் பார்த்த போது நல்லபடியாகவே இருந்தார்! என்னிடம் மிகுந்த மரியாதையோடு பேசினார்!

"உங்களோட அடிய வாங்கிய பிறகு வாழ்க்கையில் எவ்வளவு பெரிய அடி வாங்குனாலும் வலிக்கவே வலிக்காது சார்" என்ற போது அவர் வெட்கபட்டார்! உண்மையில் இவரா நம்மை அடித்தார்? ராத்திரி கனவில் வந்த அந்த கொடிய உருவம் இவருடையதா? என்ற சந்தேகம் அப்போது வந்தது!

வாழ்க்கையில் மறக்கமுடியாத காயத்தை கொடுத்த பலரும் ஒரு கட்டத்தில் நல்லவர்களாகவே தெரிகிறார்கள்!

No comments: