Monday, June 11, 2012

மக்களை முற்றுகையிடும் முப்பது கேள்விகள்


கடந்த மே மாதம் சென்னையில் துவங்கிய ஜாதிவாரி கணக்கெடுப்பு தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.ஜூன் பத்தாம் தேதி முடியும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு எப்படி எடுக்கப்படுகிறது? அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்? மக்கள் இதற்கு எப்படி பங்களிக்கிறார்கள்? ஒரு நேரடி ரிப்போட்..

நாம் சென்ற இடம் சைதாப்பேட்டைக்கு அருகிலுள்ள சின்னமலை பகுதியிலுள்ள ஆரோக்கியமாதா நகர் குடிசைப்பகுதி. சுமார் ஆறு செண்ட் அளவே உள்ள இந்த பகுதியில் சுமார் 50வீடுகளில் 200பேர் வசிக்கிறார்கள்.
கணக்கெடுப்பு எடுக்கும் அதிகாரி மற்றும் அவரது உதவியாளரும் ஒரு வீட்டு குடும்பத்தலைவியிடம் விசாரித்துக்கொண்டிருந்தார்.

நாம் அவரோடு சின்னமலைப்பகுதிகளில் பயணப்பட்டோம்.கணக்கெடுப்பை பதிவு செய்ய ஒரு டேப்லட் கணினி அதிகாரியிடம் வழங்கப்பட்டிருந்தது.அதில் சுமார் முப்பது கேள்விகள் இடம்பெற்றிருந்தது. அதில் 4 கேள்விகள் மட்டுமே ஜாதி தொடர்புடையது. எஸ்.சி, எஸ்.டியை பிரிவினை தனித்தனியாகவும் மற்றசாதியின் பெயர்பதியப்பட்டு எல்லாமே “மற்றவைஎன்ற பிரிவின்கீழ் குறிக்கப்படுகிறது.சாதி இல்லைஎன்ற பிரிவும் உள்ளது வரவேற்கத்தக்கது.தங்கள் ஜாதியை சொல்ல விரும்பாதவர்கள் இந்த பிரிவில் வருவார்கள்.

மீதமுள்ள 26 கேள்விகளில் பெயர்,பாலினம்,திருமணமானவரா போன்ற அடிப்படைகேள்விகள்.இதர கேள்விகள் சமூக பொருளாதாரம் தொடர்புடையவை.எத்தகைய வீட்டில் தங்கி இருக்கிறார்? மாடிவீடா? ஓட்டுவீடா? குடிசை வீடா? மற்றும் குடிதண்ணீருக்கு அரசுவழங்கும் தண்ணீரா? கேண்களா? கழிவறை இருக்கிறதா? இருந்தால் வீட்டுக்குள் இருக்கிறதா? வெளியே இருக்கிறதா? போன்ற கேள்விகள்.

செல்போன்,ஃபிரிஜ்,கம்ப்யூட்டர்,லேப்டாப் போன்றன இருக்கிறதா? என பொருளாதார ரீதியாக கேள்விகள். நாம் நேரடியாக பார்த்தவரையில் மக்கள் அதிகாரிகளுக்கு நல்ல முறையில் ஒத்துழைக்கிறார்கள்.தாங்கள் எந்த ஜாதி என்று சொல்வதில் யாருக்கும் எந்த தயக்கமும், கூச்சமும் இல்லை.எல்லோரும் தைரியமாக முன் வந்து சொல்கிறார்கள்.இதில் மேல்தட்டு,அடித்தட்டு என்ற பாகுபாடெல்லாம் இல்லை.

சிலர் தங்கள் ஜாதி தெரியவில்லை என்று சொன்னது ஆச்சரியமான அனுபவம்என்கிறார் கணக்கெடுத்த அதிகாரி ஒருவர்.

கலப்புத்திருமணமோ, காதல் திருமணமோ செய்தவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கணவனின் ஜாதியை கொடுத்திருக்கிறார்கள். யாரும் “ஜாதி இல்லை என்று சொல்ல முன்வருவதில்லை

ஓரிருவர் மட்டுமே “ஜாதி வேண்டாம்
என்று தங்கள் ஜாதியை சொல்ல மறுக்கிறார்கள்.அவர்களும் மேல்தட்டு மக்கள். ஜட்ஜ்காலனியில் “என் ஜாதி என்ன என்று கேட்பது சட்டப்படி குற்றம்என ஒருவர் சண்டைப்போட்டார்.இப்படி பலதரப்பட்ட மக்கள்.

மக்களிடம் கேட்கப்பட்ட 30 கேள்விகள் ஜாதிக்கணக்கை மட்டும் காட்டுவதாக இல்லை.அவை மூன்றுவகையில் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஒன்று - உண்மையிலேயே எந்த ஜாதி பொருளாதார ரீதியில் வளர்ந்திருக்கிறது என்பதும் எந்த ஜாதிமக்கள் அதிகரித்திருக்கிறார்கள் என்பதும் இந்த கண்கெடுப்பின் மூலம் வெட்டவெளிச்சமாகும்.

இரண்டு -  எத்தனை பேர் அரசு வழங்கும் குடிநீரை பயன்படுத்துகிறார்கள்.யார் யாரிடம் செல்போன் புழங்கி இருக்கிறது.கழிப்பறையில்லாத வீடுகள் எத்தனை போன்ற புள்ளிவிவரங்கள் தெரியவரும்.இந்த புள்ளி விவரங்கள் எதிர்காலத்திட்டமிடுதலுக்கு வழிவகுக்கும்.

மூன்று - உண்மையிலேயே கிராமங்களை எல்லாவசதிகளும் எட்டி இருக்கிறதா என்பதும் கிராமம் எந்த அளவு வளர்ந்திருக்கிறது என்பதும் தெரிந்துவிடும்.

(நன்றி : புதியதலைமுறை)


No comments: