Monday, June 11, 2012

நீங்களூம் ஆகலாம் கிராண்ட் மாஸ்டர்!

செஸ் என்றாலே இனி விஸ்வநாதன் ஆனந்த் தான். இதுவரை எப்படியோ, இனிமேலும் அப்படியே. காரணம் ஐந்தாவது முறையாக உலக சாம்பியனாக வரலாற்றில் தன்னை பதிந்திருக்கிறார் விஸ்வநாதன் ஆனந்த்.யார் ஜெயிப்பார் என கணிக்கவே முடியாதபடி இந்தவருடம் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அவ்வளவு டிவிஸ்ட்.



இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு இல்லாத பெருமை தமிழ்நாட்டுக்கு உண்டு. இதுவரை பதிமூன்று கிராண்ட் மாஸ்டர்களை ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் பெருமை.ஆண்கள் மட்டுமே பத்து. பெண் கிராண்ட் மாஸ்டர்கள் மூன்று பேர். அதிலும் இந்தியாவின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் விஜயலட்சுமி சென்னையை சேர்ந்தவர்.
இளைஞர்களை எடுத்துக்கொண்டால் இந்தியாவின் மிக இளம் வயது கிராண்ட் மாஸ்டர் சேதுராமன் தற்பொழுது சென்னை எஸ்.ஆர்.எம்மில் இரண்டாமாண்டு காமர்ஸ் படித்து வருகிறார்.உலக செஸ் மாஸ்டர்கள் 29 ஆண்களும்,5 பெண்களும் என பட்டியல் நீளுகிறது.

சிறப்பு:

கிரிக்கெட்டுக்கு பிறகு நம்மூரில் செஸ் தான்.இரண்டு பேர் இருந்தாலே போதும். சொல்லப்போனால் தனியாளாக தன் கையே தனக்குதவி என ஒருவரே கூட விளையாடலாம்.கிராண்ட் மாஸ்டர்கள் பலரும் தங்கள் விளையாட்டுத்திறனை சோதிக்க தனியாளாக விளையாடிப்பார்ப்பது உலகப்பிரசித்தம்.தனியே கிரவுண்ட் தேவையில்லை.இந்த உடைதான் அணிய வேண்டும்,ஷூ அணிந்து தான் விளையாட வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை.யார் வேண்டுமானாலும் விளையாடலாம்.

எங்கே பயிற்சி பெறலாம்?

“1960இல் மொளல் ஆரான் உலக செஸ் மாஸ்டராக தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திலிருந்தே தமிழ்நாடுதான் செஸ்ல நம்பர்ஒன்.
என்கிறார் தமிழ்நாடு செஸ் அசோசியன் செயலாளரான மோகன்முரளி.தமிழ்நாடு செஸ் அசோசியேசன் சென்னை செண்ட்ரல் அருகிலுள்ள நோரு ஸ்டேடியத்தில் இருக்கிறது.இதன் மாடியில் பயிற்சி அகேடமி ஒன்று தனியாக இருக்கிறது.அங்கே தற்பொழுது 30 பேர் தினந்தேறும் பயிற்சி பெற்று வருகிறார்கள்.ஆர்வமுள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் பயிற்சி பெறலாம் என்கிறார் மோகன்.

தமிழகம் முழுக்க 150க்கும் மேற்பட்ட பயிற்சி அகேடமிக்களும்,சென்னையில் மட்டுமே 20 தனியார் பயிற்சி மையங்கள் இருக்கின்றன.5வயதிலிருந்து பயிற்சியளிக்கப்படுகிறது.தினமும் பயிற்சி பெற ஒரு மணி நேரத்திற்கு குறைந்த பட்சம் 300லிருந்து 1000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. வாரம் மூன்று முதல் 6 நாட்கள் வரை பயிற்சியளிக்கப்படுகிறது.

“எங்கள் பயிற்சி மையத்தில் சேருபவர்கள் பெற்றோர்களோடு சேர்ந்து வர வேண்டும் என்ற கட்டுப்பாடு விதித்திருக்கிறோம்.காரணம் பயிற்சி மையத்தில் தினமும் 1 மணி நேரம் விளையாடும் போது பெற்றோர்களும் அதை கற்றுக்கொள்வதால் வீட்டில் இருவரும் இணைந்து விளையாடுவார்கள்.இதனால் அனுபவம் அதிகமாகிறது.எதாவது சந்தேகம் எழும்போது அதை மறு நாள் வந்து இருவரும் கேட்டு விளக்கம் பெறுவார்கள். பெற்றோர்களுக்கும் பிள்ளைகள் மீது அதிக நம்பிக்கை வரும்.பிள்ளைகள் தொடர்ந்து ஜெயிக்க உறுதுணையாக இருப்பார்கள்.என்கிறார் சென்னை திருவொற்றியூரில் சக்தி பயிற்சிமையம் என்ற செஸ் அகேடமி வைத்திருக்கும் சக்திபிரபாகர்.
ஒவ்வொரு பயிற்சி மையமும் ஒவ்வொரு விதமாக பயிற்சியளிக்கிறார்கள்.முக்கியமாக மூன்று நிலைகளில் பயிற்சியளிக்கிறார்கள்.

முதலில் தியரி:

செஸ்ஸில் பிரசித்தமான மூவ்கள் அடங்கிய புத்தகங்கள் புத்தக்க்கடைக்களில் உள்ளன.ஆரம்ப ஆட்டக்காரர்கள் இதன் மூலம் கற்றுக்கொண்டு, செஸ்விதிகளை முழுமையாக கற்றுத்தரப்படுகிறது.உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி முடிவுற்றதும் கிராண்ட் மாஸ்டர்கள் பயன்படுத்திய பிரசித்தமான மூவ்கள் அடங்கிய புத்தகம் விற்பனை செய்யப்படுகின்றன.அதையும் பயன்படுத்துகிறார்கள்.

இரண்டாவதாக இரண்டு நபர்கள் இணைந்து விளையாடி பயிற்சி பெறுகிறார்கள். இதன் மூலம் சந்தேகம் எழுந்து அதை நிவர்த்தி செய்துகொள்கிறார்கள்.

இணையத்திலும், கணினியிலும் பல்வேறு படி நிலைகளில் உள்ளவர்களுக்கான செஸ் விளையாட்டு மென்பொருள்கள் மூலம் பயிற்சி பெறுவது மூன்றாவது நிலை.

டிப்ஸ்:

செஸ் விளையாட அதிக பொறுமை தேவை எனவே தியானம் யோகா போன்றன கைகொடுக்கும்.போட்டிகாலங்களில் மாமிச உணவை தவிர்த்தலும்,அரை வயிறு சாப்பிடுவதும் நல்லது.அதிகாலை பயிற்சி பெறுவது நல்ல பலனளிக்கும் என்கிறார்கள் பயிற்சியாளர்கள்.

கிராமங்களின் மோசமான நிலை:

தமிழகத்தில் சாதித்த கிராண்ட் மாஸ்டர்களின் பின்னணியை அலசினால் ஒரு உண்மை புலப்படும்.அவர்களில் பெரும்பாலோர் சென்னை,மதுரை போன்ற நகரங்களை சேர்ந்தவர்கள்.ஏற்கனவே ஜெயித்த கிராண்ட் மாஸ்டர்கள் கூட சென்னையிலேயே பயிற்சி மையம் துவங்கி செட்டிலாகிவிடுகிறார்கள்.
இதனால் கிராமங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன.கிராமங்களிலிருந்து ஜொலித்தவர்கள் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

இதற்கு மூன்று காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
கிராமங்களில் பயிற்சிமையங்கள் குறைவு.செஸ் குறித்த விழிப்புணர்வு இல்லை.யாரும் அங்கே பயிற்சி மையங்கள் துவங்காத்தால் அவர்களுக்கு சொல்லித்தர ஆளில்லை.

“கிராமங்களில் அதிக அளவில் போட்டிகள் நடத்துவதன் மூலம் அதிக மாணவர்களை ஈர்க்க முடியும்.அதிக மாணவர்கள் ஆர்வமாக முன்வரும்போது பயிற்சி மையங்கள் துவங்க முன்வருவார்கள்.
என்கிறார் கிராண்ட் மாஸ்டரான ஆர்.பி.ரமேஷ்.இவர் கடந்த 15 ஆண்டுகளாக செஸ்குருகுல் என்ற பயிற்சி மையம் நடத்துகிறார்.

இரண்டாவது காரணம் செஸ் பணக்காரர்களுக்கான விளையாட்டு. தனியாளாக பயிற்சி பெற ஒருவருக்கு 5000லிருந்து 1 லட்சம் வரை செலவாகும். மாநில மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு பதிவுக்கட்டணமாக ஆயிரங்களில் செலவு செய்ய வேண்டி வரும்.
சாதாரணமாக ஒரு போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமானால் பதிவுக்கட்டணமாக 100லிருந்து வசூலிக்கப்படுகிறது.போட்டி நடத்த இடம்,சாப்பாடு என போட்டி அமைப்பாளர்கள் செலவு செய்துவிட்டு திரும்பிப்பார்த்தால் லாபமே மிஞ்சாது.எனவே யாரும் போட்டி நடத்த யோசிக்கிறார்கள்என்கிறார் சக்திபிரபாகர்.

மூன்றாவது காரணம் செஸ் விளையாடுபவர்களுக்கு அரசு வேலைகிடைக்காது. மாணவர்கள் நாங்க இதை விளையாடினால் எங்களுக்கு என்ன லாபம் என்று கேட்கிறார்கள்.என்கிறார் ஆர்.பி.ரமேஷ்.
ஆரம்பகாலங்களில் வங்கிகள்,எல்.ஐ.சி,ரெயில்வே,இந்தியன் ஆயில்,பாரத் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் அதிக அளவில் வேலைக்கு எடுத்தார்கள்.தற்போது அது கணிசமாக குறைந்துவிட்டது என்கிறார்கள் பயிற்சியாளர்கள்.
”””செஸ் விளையாடினால் அறிவு கூர்மையாகும்.எங்கள் பயிற்சி மையத்தில் படித்த மாணவர்கள் எல்லோரும் +2வில் அதிக மதிப்பெண் பெற்று பெரியகல்லூரிகளில் பொறியியல் சேரப்போகிறார்கள் என்கிறார் சக்திபிரபாகர்.

அரசு ஆணை:
கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் வாரத்தில் தமிழக அரசு 7 வயதிலிருந்து 17 வயதுவரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளிகளில் செஸ் விளையாடப்பயிற்சி தரப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் ஆணை வெளியிட்டிருந்தார்.

இந்த கல்வியாண்டு முதல் இது நடைமுறைக்கு வருகிறது.இதற்காக ஆசிரியர்களுக்கு காஞ்சிபுரம்,தர்மபுரி,ஈரோடு,ராமநாதபுரம்,திருச்சி
ஆகிய இடங்களில் பயிற்சியளிக்கப்படுகிறது.
அரசின் அறிவுறுத்தல் படி பள்ளிக்கொரு கிளப்பும் அதை கண்காணிக்க ஒரு ஆசிரியரும் இருக்க வேண்டும்.

அரசின் ஆணை செயல்படுத்தப்படும் போது எல்லா மாணவர்களும் செஸ் பயிற்சி பெறுவார்கள்.அவர்களுக்கு அதன் மூலம் ஆர்வம் அதிகரிக்கும்போது தானாகவே பயிற்சி மையங்கள் அதிகரிக்கும்.கிராண்ட் மாஸ்டர்கள் உசிலம்பட்டியிலும்கூட உருவாவார்கள்.விஸ்வநாத் ஆன்ந்த மட்டுமே தமிழ்நாடல்ல!!

(கிராண்ட் தமிழர்கள்):

சசிகிரண் – தமிழகத்தின் இரண்டாவது கிராண்ட்மாஸ்டர்(2000). 32வயதாகும் இவர் சென்னையைச் சேர்ந்தவர்.ஆசிய அளவில் மூன்றாவது ரேங்கிங்கும் உலக அளவில் 26ஆவது FIDE ரேட்டிங்கும் பெற்றவர்.இவரது நகர்த்தல்கள் internet chess club இல் பப்லூஎன்ற பெயரில் இடம் பெற்றுள்ளது.மத்திய அரசு 2002இல் அர்ஜுனா விருது வழங்கி கவுரவித்துள்ளது.

ஆர்.பி.ரமேஷ் –

பனிரெண்டு வயதில் பக்கத்துவீட்டுக்காரருடன் துவங்கியது இவரது செஸ் ஆர்வம்.2003இல் கிராண்ட் மாஸ்டரானார்.செஸ்ஸில் அடியெடுத்துவைத்தவர் தற்பொழுது சென்னையில் செஸ்குருகுள் என்ற பயிற்சிமையத்தை நடத்தி வருகிறார்.இந்திய செஸ் ஃபெடரேசன் தேர்வு கமிட்டி உறுப்பினர்.உலக அளவிலான போட்டிகளில் பயிற்சியாளராக இருந்தவர்.

மகேஷ் சந்திரன் – 

இவரது செந்த ஊர் மதுரை.இந்தியாவின் பனிரெண்டாவது கிராண்ட்மாஸ்டர்.ஏழுவயதில் அண்ணன் மற்றும் அம்மா அப்பா செஸ் விளையாடுவதை பார்த்த போது ஆர்வம் தொற்றிக்கொண்டது.இவர் செஸ்பயிற்சியாளரும் கூட.டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை கணிப்பொறி பட்டப்படிப்பு பயின்றவர்.

தீபன் சக்கரவர்த்தி – 

2006ஆம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் பட்ட்த்தை வென்ற இவர் இந்தியாவின் 14வது கிராண்ட் மாஸ்டர். மதுரையை சேர்ந்தவர்.இவரது அப்பா ஜெயக்குமார் விளையாடியதை பார்க்கும்போது ஏற்பட்ட ஆர்வத்தில் இவரும் களத்தில் குதித்தார்.எஸ்.ஆர்.எம் கல்லூரியில் எம்.பி.ஏ பயின்றவர்.இருபது வயதுக்குள் ஆசியன் சேம்பியன்பட்டத்தை கைப்பற்றிய பெருமைக்குரியவர்.

அருண்பிரசாத் – 2008ஆம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றவர்.

சுந்தர்ராஜன் கிடம்பி – 2009ஆம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றவர்.

ஆர்.ஆர்.லக்‌ஷ்மண் – 2008ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த போட்டியில் ஜெயித்த இவர் இந்தியாவின் இருபதாவது கிராண்ட்மாஸ்டர் 

அதிபன் இந்தியாவின் 23வது கிராண்ட்மாஸ்டர்.இவரது தந்தை பாஸ்கரன்.சென்னையை சேர்ந்த இவர் தற்பொழுது எஸ்.ஆர்.எம்மில் படித்து வருகிறார்.

சேதுராமன்
இந்தியாவின் மிக இளம்வயது கிராண்ட் மாஸ்டர்.சென்னையை சேர்ந்தவர்.சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் இரண்டாமாண்டு காமர்ஸ் படிக்கிறார். நான்கு வயதில் செஸ்ஸில் அடி எடுத்துவைத்த இவர் தன் அப்பாவிடமிருந்தே பயின்றார்.8வயதில் சென்னை அளவில் ஜெயித்த இவர்,2009இல் தன் பதினாறு வயதில் உலகசாம்பியனாக தடம் பதித்தார். இதுவரை உலக அளவில் 2தங்கப்பதக்கமும் ஒரு வெள்ளிபதக்கம்,ஆசிய அளவில் 4,காமன்வெல்த் போட்டிகளில் 2ம்,இந்திய அளவில் 10 பதக்கம் என மொத்தம் 29 பதக்கங்கள் பெற்றிருக்கிறார்.

விஜயலக்‌ஷ்மி
இந்தியாவின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர்.சென்னையை சேர்ந்தவர்.தந்தை சுப்பராமன் தான் இவரது பயிற்சியாளர்.செஸ் ஒலிம்பியாடில் வென்ற முதல் பெண் 2000 மற்றும் 2002 ஆண்டுகளில் வென்றவர்.இந்திய பெண்கள் சேம்பியனாக ஆறுமுறை ஜெயித்த பெருமைக்குரியவர்.2005இல் கிராண்ட்மாஸ்டர் ஸ்ரீயம் ஜாவை மணந்தார்.ஏர் இந்தியாவில் பணிபுரிகிறார்.

ஆர்த்தி ராமசாமி
2003ஆம் ஆண்டு கிராண்ட் மாஸ்டராக தேர்வு செய்யப்பட்டார்.சென்னையை சேர்ந்தவர்.எட்டுவயதில் ஆழ்வார்பேட்டையிலுள்ள முத்தையா செட்டியார் பள்ளியில் துவங்கியது இவரது செஸ் வாழ்க்கை.1993இல் 12 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் முதல்பரிசை வென்றது தான் இவரது ஆரம்பம்.கிராண்ட் மாஸ்டர் ஆர்.பி.ரமேஷை திருமணம் செய்தார்.

பயிற்சி மையங்கள்

சென்னை
1)       8 பை 8, மேற்கு மாம்பலம், 98407 03544
2)       அண்ணாநகர் செஸ் அகேடமி - 98401 82753
3)       செஸ் குருகுள் – டி.நகர், 9444409043
4)       குரோம்பேட்டை செஸ் இன்ஸ்டிட்யூட் , 9884107267
5)       கிங் செஸ் ஃபவுண்டேசன்,மாதவரம், 9551046464;
6)       புரசை செஸ் அகேடமி,புரசைவாக்கம், 9444005250
7)       சக்தி செஸ் அகேடமி,மைலாப்பூர் 9444255196.
8)       டிநகர் செஸ் அகேடமி,டி.நகர், 94444 66155
காஞ்சிபுரம்
1)       மாஸ்டர் மைண்ட் செஸ் அகேடமி
பம்மல்
9444177703
2)       மவுண்ட் செஸ் அகேடமி,உல்லாகரம், 9444210914,
புதுக்கோட்டை
1)       மீனாக்க்ஷி செஸ் அகேடமி, 98435 84015
சேலம்
1)       நோவா செஸ் அகேடமி, அலகாபுரம் புதூர்
2)       யுடிலிடிஃபாரம் ஆஃப் செஸ்,மெய்யனூர், 9443240899
சிவகங்கை
கேஸ்ட்ல் செஸ் அகேடமி,காரைக்குடி, 98431 36945
தஞ்சாவூர்:
தி கிங் பான் செஸ் அகேடமி,கபிஸ்தலம், 9894030450
திருவள்ளூர்
ப்லூம் செஸ் அகேடமி,திருவெற்றியூர் 9380832268


( நன்றி : புதியதலைமுறை)

3 comments:

VIGNESHWARAN said...

Good job!......

VIGNESHWARAN said...

gOOD JOB>.....<

வவ்வால் said...

நல்ல பகிர்வு, செஸ் பத்தி சொல்ல நம்மக்கிட்டேயும் அனுபவக்கதையே,நிறைய இருக்கு.இங்கு குறிப்பிட்ட பலருடன் அவர்களின் ஆரம்பநாட்களில் செஸ் போட்டிகளில் விளையாடி இருக்கேன்.

நிறைய செலவு பிடிக்கும் ஒரு விளையாட்டு ,பார்க்கத்தான் எளிமையாக இருக்கும்.:-))