Thursday, February 14, 2013

நூல்களுக்கிடையே ஒரு காதல்



எனக்கு அதிசயமாக இருக்கிறது. நான் இவ்வளவு மாறி இருக்கிறேன். நான் அதிகம் படிப்பவனில்லை. தலையணை அளவுள்ள புத்தங்களின் வாசனையை கூட முகர்ந்ததில்லை. நூலகத்திற்கும் எனக்கும் தொடர்பே இருந்ததில்லை. கல்லூரியில் கட்டாயமாக லைப்ரரி வகுப்புவேளை இருந்த சமயத்தில் கூட விருப்பமில்லாமல் கட்டடித்து வெளியே சுற்றுபவன், இன்று அதிசயமாக நூலகம் வந்திருக்கிறேன். அண்ணா நூலகம். சென்னையின் மிகப்பெரிய. மன்னிக்கவும், ஆசியாவின் இரண்டாவது பெரிய. இருக்கட்டும். நான் நூலகத்திற்கு வந்ததைப்பற்றி சிலாகிக்க என்ன இருக்கிறதென யோசிக்கலாம். இன்று காதலர்தினம்.


இதுவரை என்னுடைய எந்த காதலர்தினத்தன்றும் எனக்கு காதல் வாய்த்ததில்லை. காதலை சொன்னதில்லை. சின்னதாக ஒரு முத்தமில்லை. யார் கையையும் பிடித்து தோளில் சாய்ந்து ரோட்டில் நடந்ததில்லை. கிஃப்ட் கொடுத்ததில்லை. கடற்கரையில் குதித்துவிளையாடியதில்லை. எனக்கு வாய்த்த எல்லாக்காதலும், காதலர்தினம் வருவதற்கு முன்பே சொல்லப்படாமலே சொர்க்கம் சேர்ந்திருக்கின்றன. அந்த அலுப்புகூட இன்று நூலகம் வருவதற்கு காரணமாக இருக்கலாம்.

இது எதோ திட்டமிட்டு நடந்ததாக நினைக்க வேண்டாம். சொன்னால் நம்ப மாட்டீர்கள்.  நூலகத்தில் நுழைந்து சில மணி நேரம் கழித்து தான் இன்று காதலர்தினமென்பதே தெரியும். எப்படி மறந்தேன் என்பதே தெரியவில்லை. சினிமா தொடர்பான ஒரு புத்தகத்தை தேடிதான் அண்ணா நூலகம் வந்திருந்தேன். ஆறாவது தளம் செல்ல வேண்டுமாம். படிக்கட்டில் தான் ஏறி சென்றேன். ஆறாவது தளத்தை அடைந்ததுமே  நுழைவுவாயில் அருகே ஒரு அம்மணி தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தது. எனக்கு அவர் பற்றி பெரிய அக்கறை ஏதுமில்லை.

கண்டதும் காதல் வரும் என்றெல்லாம் சொல்லப்படும் சேதிகள் கட்டுக்கதை.பீலா. புருடா இன்னும் என்னவெல்லாம் உண்டோ அத்தனையும் அதுவே. நேரே உள்ளே நுழைந்தேன். ஒவ்வொரு புத்தகமாக தேடி மேய்ந்தேன். எடிட்டிங், கேமரா ஆங்கிள், சினிமா வரலாறு என நிறைய புத்தகங்கள் இருந்தன. எல்லாம் ஆங்கில புத்தகங்கள். best 100 films என்ற புத்தகம் எடுத்தேன். அதில் பவர்ஸ்டார் படம் இருக்கலாம் என்ற என்னுடைய கணிப்பே காரணமாக இருக்கலாம். புத்தகத்தின் அட்டையால் கவரப்பட்டு அதை பார்த்துக்கொண்டே வந்து ஒரு  நல்ல சீட்டாக தேர்வு செய்து உட்கார்ந்தேன்.

5 பக்கங்களைத் தாண்டியிருப்பேன். சரியாக அந்த  படம் என் கண்ணில்பட்டது. the kiss என்ற திரைப்படத்தில் இருந்த முத்தக்காட்சி போட்டோ ஒன்றை பதிப்பித்திருந்தார்கள்.எனக்கு வெக்க வெக்கமாக வந்து தலையை உயர்த்தினேன். எனக்கு எதிரே அழகே உருவான ஒரு தேவதை.ஆம் தேவதையே தான். வட்டவடிவ முகம். பூசினாற்போன்ற முகம்.மஞ்சள்  கலந்த வெளிர் நிறம்.5.8 அடி உயரம் இருக்கலாம். கோவா பட நாயகி பியா போல இருந்தார். ஆமாம் exactly. இதற்குமேல் எந்த வர்ணனையும் தேவையில்லை.

அவளுக்கு முன் நிறைய புத்தகங்கள் பரப்பிவைக்கப்பட்டிருந்தன. எல்லாம் தலையணை உயரப்புத்தங்கள். குண்டு குண்டாக இருந்தது.தலைப்பை பார்த்தேன். எல்லாம் cryptology தொடர்பான புத்தகங்கள். எனக்கு க்ரிப்டாலஜி ரொம்ப விருப்பம். எப்போதிருந்தென்றால், உன்னைப்போலொருவனில் என்னென்னவோ காட்டுவார்களே. கமல் கூட callஐ ரூட்டிங் செய்து சூப்பர் மேன் வேகத்தில் செல்வதாக சொன்ன போது ஏற்பட்டது தான் அது. அதன்பின் கல்லூரியில் அது தொடர்பான பாடம் வந்தபோது படித்தது. ஆனால் பாடத்தில் வந்தது மொக்கை. மனப்பாடத்திற்கானது. அதன்பிறகு எத்திகல் ஹேக்கிங் பற்றி நிறைய தேடினேன். அது படிக்க ஒன்றரை லட்சமாகுமாம்.

ஆனால் எனக்கு முன்னே ஒரு ஹேக்கிங் எக்ஸ்பர்ட் அமர்ந்திருந்தார். அவரிடம் பேச்சுகொடுத்தால் எனக்கு வேண்டிய தகவல் கிடைக்கலாம். எதிரே புத்தகங்களுக்கு மேலாக ஆப்பிள் லேப்டாப் ஒன்றும் இருந்தது. அவள் யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள். கிசுகிசுப்பாய்.. காதலனோ.. என்ன பேசுகிறார்களென கவனிக்க அவளை உற்று பார்த்தேன்.ஐயோ அவள் என்னை பார்த்துவிட்டாள். நான் புத்தகத்தை பார்ப்பது போல நடித்தேன்.  திரும்பவும் அவள் உதடு என்ன பேசுகிறதென உற்று பார்த்தேன். அழகாக இருந்தது. அவள் பேச்சு.  நீண்ட நேரமாக அவள் பேசிக்கொண்டே இருந்தாள். ஒரு மணி நேரம் ஆகி இருக்கும்.  நான் விடாது அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். பேச்சை எப்படித்துவங்கலாம் என தயார் செய்துகொண்டிருந்தேன்.

எப்படியோ அவள் மொபைலை கீழே வைத்துவிட்டாள். அது ஐபோன். சமீபத்திய மாடல். அவள் மீதிருந்து புதுவகையான செண்ட் வாசனை வந்து கொண்டிருந்தது. அது என்னை எதோ ஒரு லோகத்துக்கு தறதறவென இழுத்து சென்று கொண்டிருந்தது.

அவள் என்னை பார்த்தாள். அதில் கொஞ்சம் முறைப்பு இருந்தது. “என்ன சைட்டா” என்ற கேள்வி பொதிந்திருந்தது. “ நீங்க க்ரிப்டாலஜி படிக்கறீங்களா” முதல் பாலே மூக்கை நோக்கி வீசினேன். கண நேரம் தாமதித்தாலும் அவளுக்கு போன் வரக்கூடும் என்ற இக்கட்டான நிலை. ”ஆமாம்” என ஆச்சரியமாக சிரிக்க முயற்சித்து கையை அகலவிரித்து, எப்படி என என் கண்ணை உற்றுப்பார்த்தாள்.அவள் இந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை. “இந்த புக்ஸ் பார்த்தேன். எனக்கு ஹேக்கிங் மேல ரொம்ப ஆர்வம்” என நேரடியாக பேச்சுக்குள் நுழைந்தேன். அவள் ஐஐடியில் படிக்கிறாளாம்.கிரிப்டாலஜி 3ஆம் ஆண்டாம். இங்கே அமைதியாக இருப்பதால் படிக்க வருகிறாளாம்.

”நீங்க என்ன பண்றீங்க” அவள் கேட்டாள். என்ன சொல்வேன். உண்மையை சொல்வதா? பொய் சொல்வதா? தீர்மானித்துக்கொண்டேன். உண்மையை சொல்லிவிடுவதென முடிவெடுத்துவிட்டேன். ”நான் உங்க அளவுக்குலாம் படிக்கல. நீங்க பெரிய ஆளு. ஐஐடியில படிக்கறீங்க. நான் வெறும் BCA" என்றேன்.

"look எந்த படிப்பும் சின்னது இல்ல. படிப்புல சின்னது பெரிசுன்னுலாம் எதுவும் இல்ல. சரியா” என டாபிக்குக்கு உள்ளே சென்றார்.

யெஸ். இதற்காகத்தான் காத்திருந்தேன். சேகர் சிக்கிட்டான்.

“ நீங்க லவ்வர்ஸ்டே செலப்ரேட் பண்ணலையா?”

“எனக்கு அதுலலாம் இண்ட்ரஸ்ட் இல்ல. நீங்க”

“எனக்கும்”

”என்னங்க. இவ்ளோ அழகா இருக்கீங்க. பொய் பேசறீங்க”

“என்ன பொய் பேசுனேன்”

“லவ் இல்லன்னு சொன்னீங்கல்ல”

“ரியலாவே இல்ல. ஆமா எனக்கு லவ் இருந்தா உங்களுக்கு என்ன? இல்லாட்டி உங்களுக்கு என்ன” கோவம் காட்டினாள்.

“ஹே டோண்ட் பீ சீரியஸ். சும்மா டெம்போ ஏத்த தான் அப்டி கேட்டேன். பட். நீங்க கோவப்பட்டா கூட அழகா இருக்கு”

அவள் வெட்கப்பட்டாள்.

“அழகா? உங்க கண்ல எதோ ப்ராப்லம்”

“ஆமாம். அதான் நீங்க கூட அழகா தெரியறீங்க”

அவள் கடுப்பில் லைபரரி புத்தகத்தைத்துக்கி என்மேல் அடித்தாள்.

“ஏங்க இது லைப்ரரி புக்குங்க” என்றேன்.

 “அப்டி தான் போடுவேன். என்ன பண்ணுவீங்க” என்றாள்

அவள் பெயர் அனுரக்‌ஷாவாம். தமிழ்நாட்டிலிருந்து பெங்களூர் போய் செட்டிலான குடும்பமாம்.சென்னை வெயில் தான் பிடிக்கவில்லையாம். இங்கே இருக்கும் பசங்க மாதிரி வேறு எந்த ஊர் பசங்களும் முதல் சந்திப்பிலேயே பச்சக் என ஒட்டிக்கொள்வதில்லையாம். இது எனக்காகவே அவள் சொல்லியிருக்க வேண்டும்.அவங்க அப்பா ஷாப்பிங் மால் வைத்திருக்கிறாராம். சமீபத்தில் பார்த்த திரைப்படம் கடலாம்.அதன் மொக்கை தன்மை குறித்து பேசினோம். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை பற்றி. பேச்சு பிறகு எங்கெங்கோ சென்று ஸ்லம்டாக் மில்லியனர். அதன் இயக்குனர் வெளிநாட்டுக்காரர் என்பதாலேயே ஆஸ்கர் கொடுக்கப்பட்டதாக நான் சொன்ன கணிப்புகள். அவள் ரோஜா படத்திலிருந்து அவர் போட்ட இசையை ஒப்பிட்டு மறுத்தது என எல்லாமே சுவாரசியம்.

லைப்ரரியில் பேசவேகூடாது என்ற கட்டுப்பாடெல்லாம் அவளிடம் பேசியபோது காணாமல் போனது. நடுநடுவே என் குரல் உயர்ந்த போது  நூலக கண்காணிப்பாளர் ஒருவர் வந்து “சார். பேசறதுன்னா வெளில போய் பேசுங்க” என்றார்.அவளைப்பிரிந்து வெளியே போக பயந்து “சாரி சார்” என்பதாக சொல்லிவிட்டு அமைதியானேன். அவள் புன்னகைத்தாள்.முதல் சந்திப்பே இவ்வளவு சுவாரசியமாக இருக்குமென யோசிக்கவேயில்லை. திடீரென அவளுக்கு கால் வந்தது. “சாரி. ஹேவ் டு கோ” என்றாள்  நான் கூச்சமே படாமல் “யோர் நம்பர்” என்றேன். சிரித்தாள். கொடுத்தாள். காதலர் தினம் காதலை சொல்வதற்காக மட்டுமல்ல. உருவாக்கிக்கொள்ளவும் தான்!!

இப்படி எல்லாம் பேசலாம் என்று நினைத்திருந்தேன்.அந்த க்ரிப்டாலஜி புத்தகம் அவள் எடுத்ததில்லையாம். நான் அசடு வழிந்துகொண்டே. “சாரி.இல்ல புக் மேல இருந்துது. அதான் கேட்டேன்” என்றபோது அவளுக்கு கால் வந்தது. அவள் ஃபோனை காதில் வைத்து மும்முரமானாள். நான் அந்த இடத்தைவிட்டு விலகினேன். இதுக்குன்னே வந்துடறானுங்க என அவள் நினைத்திருக்கக்கூடும்.

1 comment:

விஸ்வப்ரியா said...

ஹ் ஹ்ா. . ப்ள் ப்ள்ல்ப்ப்ா ச்ல் ஸ்வ்ற்ார்ா. . ச்ிீக்க்ிர்ன்ம்ம்ெே ஒர்ு ஐஐத்ிட்ி ப்ொண்ண்ு ச்ெத்ட் ஆக் வ்ாழ்த்த்ுக்ள் :)